Thursday, October 22, 2015

தெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.

 
கவிஞர் பத்மஜா நாராயணன் சென்னையில் பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிகிறார் . ஆங்கிலம் , ஃப்ரென்ச் , தமிழ் என்று பன்மொழிப் புலமையும் , எழுத்து , நடிப்பு போல பன்திறமைகளும் கொண்டவர் . மொழிபெயர்ப்புத் தளத்திலும் சிறப்பாகப் பங்காற்றி வருகிறார் .
கதவு , கொம்பு , வெயில்நதி , பூவரசி , வலசை ஆகிய சிறுபத்திரிக்கைகளிலும் , மலைகள்.காம் , அதீதம் .காம் , பண்புடன். காம் , கீற்று.காம் ஆகிய மின்னதழ்களிலும் இவருடைய படைப்புகள் பிரசுரமாகி உள்ளன .
மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் (2012 ) , தெரிவை ( 2014 ) என்று இவருடைய இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன . இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ,  கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 2012 வருடத்துக்கான முதல் பரிசை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
ஒரே ஒரு நல்ல கவிதையை எழுதிவிடுவதைக் காட்டிலும் ஒரு முழு கவிதைத் தொகுப்பை விமர்சனம் செய்து விடுவது மிக எளிதான ஒன்று என்பது தான் விமர்சனங்கள் எழுதும் போது எனக்கு எப்போதும் தோன்றுவது .
சில மாதங்களுக்கு முன்பு , இணையத்தில் அவர் முன்னர் பகிர்ந்திருந்த ..
சிறிது மூடியிருந்த / கதவின் இடையில் / தெரிந்த / உன் பாதங்களுக்கேற்ற / முகத்தை / நான் மனதில் / வரைந்துவிட்டேன். / வரைந்த அது / சிதையப் போகிறது / தயவு செய்து / என் கண்படாமல் போ நீ ..
என்ற , எளிய ஆனால் சொற்கச்சிதமும் , வெளிப்பாட்டில் அறிவுக்கூர்மையும் தெரிந்த இந்தக் கவிதை தான் எனக்கு பத்மஜாவின் முதல் தொகுப்பான “மலைப்பாதையில் நடந்த வெளிச்சத்தை” அறிமுகம் செய்து வைத்தது . கவிதைகளின் எண்ணிக்கையைப் பார்க்க தெரிவை முன்னதை விடவும் சிறியது என்றாலும் விசாலப்பட்டிருக்கும் கவிஞரின் கவித்தளத்தை பறைசாற்றும் விதத்தில் இரண்டாம் தொகுப்பு அமைந்துவிட்டிருக்கிறது .
நவராத்திரியின் போது கொலு வீற்றிருக்கும் தெய்வத்திருவுருவங்களை ரசிக்க விடாமல் , தம் பால் கவனம் ஈர்க்கும் ரங்கோலிகளைப் போல அல்லாமல் பொம்மைகளைத் தாங்கிப் பிடிக்கும் படிகளாக ட்ராட்ஸ்கி மருதுவின் கோட்டோவியங்கள் கவிதைகளோடு இயைந்து அருமை சேர்க்கின்றன .
கவிதையின் இந்தச்சொல்லுக்கான அர்த்தம் என்னவாக இருக்கக் கூடும் என்று வாசகனை பீதி அடைய வைக்கும் கரடுமுரடான வார்த்தைகளோ , அர்த்தமும் தொடர்புமற்ற படிமப்பிரயோகங்களோ இல்லாத , எளிய , இயல்பான மொழி , உண்மையை நேர்மையுடன் வெளிப்படுத்தும் தன்மை , வெகுகாலமாகப் பலராலும் பாவிக்கப்படும் வடிவத்தைச் சுவீகரித்துக்கொண்டு விடாமல் தனக்கேயான ஒரு தனி மொழி என்று நல்ல கவிதைகளை எழுதித் தொகுத்திருக்கிறார் பத்மஜா . மிக எளிய , இனிமையான ஒரு கவிதையைப் பற்றிச்சொல்லி துவங்குகிறேன் ..
“நாய்க்கனவு” என்ற ஒரு கவிதை
/ ….
குழந்தையென / ஊஞ்சலாட்டி தூங்கியபின் / அதன் முகம் பார்த்து / வினாவொன்று எழும் / என்றாவது / எப்பொழுதாவது / அதன் கனவில் / நான் வருவேனா ?
இதைப் படித்ததும் .. பசிக்கு அருந்தியபின்னும் , ஆசையில் , மிதமிஞ்சிப் பாலருந்தி விட்டு வாயிலெடுக்கும் குழந்தையின் மீது தாய்க்குப் போல கவிஞரின் மீது இரக்கம் சுரக்கிறது வாசகனுக்கு .. சுயஇரக்கம் , பச்சாதாபம் என்று தோன்ற விடாமல் இயல்பான ஒரு நெகிழ்வை உண்டாக்கி செல்லும் முடிவு .. இன்றைய எந்திரச்சூழலில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் அன்புக்கான ஏக்கம் எத்தனை அழகான கவிதையாகி இருக்கிறது !
குத்தும் தனிமையின் வலி பேசும் கவிதைகள் பலவும் தொகுப்பில் உண்டு என்றாலும் ,
எல்லாப் பறவைகளும் / பறந்து சென்று விட்டன / ஒரே ஒரு மேகம் மட்டும்/ மெதுவாய் மிதந்தபடி / நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதில் / ஏனோ அலுப்பே இல்லை / மலையும் நானும் மட்டும்
எனும் இந்த சிறு கவிதை எனக்கு மிகப் பிரியமான ஒன்றாக இருக்கிறது ..
//கவிதையை வாசிக்கையில், கவிஞர் சொல்ல வருவது இதுவல்ல; வேறேதோ என்று வாசிக்கிறவருக்குத் தோன்றக் கூடாது . மாறாக, இதைக் கவிஞர் எவ்வளவு பொருத்தமாகச் சொல்லி இருக்கிறார் என்று முதலில் தோன்ற வேண்டும்; பிறகுதான், இதுமட்டும் அல்ல போல் இருக்கிறதே; கவிஞர் சொல்ல வந்தது வேறொன்றும் போலவே என்றும் ஒரு தோற்றம் தர வேண்டும். அதாவது, verbal level meaning should be the first priority; rest are all secondary and tentative. //
என்பார் கவிஞர் ராஜசுந்தரராஜன் .. எத்தனை அழகாக இந்த விளக்கத்துக்குப் பொருந்தி வருகிறது இந்தக் கவிதை ! காட்சிரூபமாக விரியும் வரிகளின் இடையில் ஒளிந்து கொண்டிருக்கும் கொடிய தனிமை , கவிதை முடிந்ததும் தன் ரீங்காரத்தை நம்முள் அதிரச்செய்யும் இந்த subtlety தான் கவிதைக்கு எத்தனை சிறப்புச் சேர்க்கிறது !
மனதில் பதிந்த , பாதித்த , ஏதோ ஒரு சம்பவம் , ஒரு காட்சி .. கிளர்த்திவிடும் எதிர்வினைகளே ஒரு கவிதையின் வடிவில் பெரும் பங்கு வகிக்கின்றன . சொல்லும் பொருளுமாகச் சேர்ந்து நனவிலியின் இயக்கம் சித்திரங்களாக வெளிப்பட்டு வரிகளாக உருக்கொள்கின்றன . கவிஞர் சொல்ல வருவது என்ன என்பதைத் தாண்டி வாசகனின் மனதில் அதிர்ச்சி தரத்தக்கதாக , வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு உணர்ச்சிகளுக்கு ஆட்படுத்தக் கூடியதாக , தர்க்கரீதியான பொருளைத் தேடத் தோன்றாமலும் செய்ய ஒரு நல்ல கவிதையால் முடியும் . கவிதையின் சொல்லையும் பொருளையும் பொருள் தொடர்புகளையும் சரியான ஒரு கட்டமைப்பில் கவிஞன் அமைக்கும் போது இம்மாதிரியான கவிதைகள் சாத்தியப்படுகின்றன . இதற்கு நல்ல மொழியறிவும் ஆழ்மன பிம்பங்களை சொற்களாக கவித்துவமாக வெளிப்படுத்தும் திறனும் அத்தியாவசியமாகிறது ..
“என்னிடம் உள்ள விடைகளுக்கெல்லாம்” எனத் துவங்கும் கவிதையின் சில வரிகளை உதாரணமாகச் சொல்லலாம்
…..இங்கிருந்து காணும் போது / இரண்டாவது வானம் தெரிகிறது / நாளை மலரப் போகும் பூவின் / மணம் இதோ என் கைகளில்
…. / தேர் ஏறி ஊர்வலம் வர நடந்து வருகிறது சிவம் /
அதே போல்
“கோபம் திரும்பத் திரும்ப வருவது போல” எனத் துவங்கும் ஒரு கவிதையின் வரிகள்
…./ ஓர் உறைந்த ரத்தத்துளி போல் / நான் அணியும் ஒரு மாயத்தோற்றமும் / என்னிடமுண்டு / அதை என் இடது கையில் ஒளித்து வைத்திருக்கிறேன் / உன்னையும் உன் சிசுவையும் / அதன் பாலூறிய கண்ணில் பொதிந்திருந்தேன் / என் உதடமர்ந்த ஒரு கிழத் தவளையை / நான் வெட்டி வீசும் போது / உன்னை முத்தமிடுகிறேன் …//
இன்னதைத் தான் கவிஞர் சொல்ல முற்படுகிறார் , இந்தப் படிமம் இதைத்தான் குறிக்கிறது என்ற நிச்சமின்மைகளின் ஊடே வாசகனின் நனவிலியில் பொதிந்து கிடக்கும் எண்ணற்ற பிம்பங்களை , உணர்ச்சிகளைக் கிளர்த்தும் வரிகள் இவை .
“வன்புணர்ந்த வீடுகள் வடிக்கும் கண்ணீர்” , “அடகுக்கடை” போன்ற பட்டியல் கவிதைகளைப் பார்க்கும் போது “என்னிடம் உள்ள ..”. , “கோபம் .. ” போன்ற கவிதைகள் கவிஞரின் மீது மிகுந்த நம்பிக்கையை , எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன .
சிறிய ஊடல்கள் முதல் பெரிய மனத்தாபங்கள் வரை , சின்னஞ்சிறிய பிரச்சினைகளிலிருந்து தீர்க்க இயலாத துன்பங்கள் வரையிலும் கூட .. நம்பிக்கை ஏற்படுத்தும் , வாழ்வை இனியதாக்கும் , வாழத்தகுந்தது தான் என்ற நம்பிக்கையைத் தரும் ” வசந்தம் ” காதல் தானே .
…. மாலை சூரியனில் கருகும் கருங்கலிடை / மலர்ந்து விரிந்தது ஒரு நீலப் பூ / ….. உயிர்க்கும் செடியினை வெடித்துக் கிளப்பியது / நீள் மழை புணரும் பொறை பூமி / வந்தது வசந்தம் . /
என்ற இவை தொகுப்பின் காதல் கவிதைகளில் மிக உயிர்ப்பான வரிகள் !
“முத்தமலை” , “மரங்கீழ் மிழற்றல்” , “முத்தம் சரணம் கச்சாமி” ஆகிய தாபத்தைப் பேசும் கவிதைகளில் ஒரு கெஞ்சும் தொனியைக் காண்பதாக அம்பை தன் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் . அது கொஞ்சும் தொனியாகத் தான் எனக்குத் தெரிகிறது ..சிருங்காரத்தில் கொஞ்சலுக்கும் கெஞ்சலுக்கும் இடையிலான வேறுபாடு மிகச்சிறியது என்றாலும் முக்கியமானது அல்லவா ?
சர்வசுதந்திரத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஆண் கவிஞர்களுக்கு இடையில் முத்தக் கவிதைகள் எழுதவும் அந்த மட்டுக்கு முடித்துக் கொள்ளவும் மட்டும் தான் பத்மஜா போன்றோரின் எல்லைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. பால்உணர்வுகளை , வேட்கைகளை , கட்டற்று , தங்கள் கவிதைகளில் பிரகடனப்படுத்தும் பெண் கவிஞர்களைக் கெட்ட வார்த்தைக் கவிஞர்கள் என்று என்னிடமே விமர்சித்த ( ஆண் ) கவிஞர்களை என்ன செய்வது ?
தமிழ்க்கலாச்சார வாழ்வின் உள்ளார்ந்த அலைக்கழிவுகளை எதிர்கொள்ளத் திராணியற்ற , அல்லது .. தன் மொழியின் துணையுடன் எதிர்கொள்ளத் துணியும் பெண்களை தன் கவிதைகளில் பிரநிதித்துவப்படுத்தியிருக்கி
றார் பத்மஜா நாராயணனன் என்று தான் சொல்ல வேண்டும் . வகுக்கப்பட்டிருக்கும் நியதிகளுக்குக் கட்டுப்பட்டு தன் எல்லைகளைச் சுருக்கிக்கொண்டிருக்கிறாரோ பத்மஜா என்ற கேள்வியும் கூட பல இடங்களில் எனக்குத் தோன்றியது .
இங்கு தான் “இன்றென் கருவறை ஒரு முறை புரண்டது” என்ற கவிதையைச் சொல்ல வேண்டி வருகிறது .. துயரமும் வலியும் நிறைந்த சொற்களான
/மருந்தொன்று கொண்டு வா / இல்லை ஒரு திராவகம் ! / பொசுங்கட்டும் / என் தூக்கம் கலைக்கும் துரோகி / … விலகு / ஐயோ ! அணை / இல்லை ! / இவள் பெண்மையைக் கொல் / ..
இவை .. வெறும் பாலியல் வேட்கையைப் பேசும் சொற்களாகப் பார்க்கப்படும் அபாயம் உள்ளது என்ற நினைப்பே ஆயாசம் அளிப்பதாக இருக்கிறது ! இம்மாதிரியான தளங்களில் பெண் பேசுவது இன்னமும் சலனங்களைத் தான் கொண்டு வருகிறது என்பது வேதனை . மேலும் அது கவிஞரின் துயரமாக / வேட்கையாகத் தான் இப்பொழுதும் பார்க்கப்பட வேண்டுமா என்ன ?
பழைய பாணியிலான ஒரு சில கவிதைகள் , சிலவற்றை முடித்திருக்கும் போக்கில் தட்டையான மற்றும் இணக்கமற்ற தன்மை
எ.கா /முதன் முறையாய் சந்தித்துவிடுவாய் / சொல்லிவிட்டேன் ஆமாம் ! / , /அதற்காக / பேராசைக்காரி என்று மட்டும் / என்னைக் கூறிவிடாதே ! /
போன்ற வரிகள் ..
கவித்துவமாய்த் துவங்கி வசனநடையில் சறுக்கும் சில என்று சில விமர்சனங்களையும் கவிஞரிடத்தில் சொல்ல வேண்டியவளாக இருக்கிறேன் .
தெரிவையின் மொழிபெயர்ப்புக்கவிதைகள் :
அபாரமான இரு மொழிப்புலமையும் மொழிபெயர்ப்புக்குத் தேவையான நுண்ணறிவும் உள்ளவராக இருக்கிறார் பத்மஜா ..not only is she proficient in her language skills she sure has the knack for translation ..
“without it ( translation ) we would live in arrogant parishes bordered by silence ” -
என்கிறார் George stainer
கலாச்சாரக் கூறுகளான நடை , உடை , பாவனை போன்றவற்றிர்க்கும் மிகுந்த அர்த்தம் இருக்கிறது என்பதோடு மூலத்தின் உச்சத்தை மொழிபெயர்ப்பில் கொண்டு வருவது என்பது ஏறக்குறைய இயலாது எனும் போது ஆங்கிலம் மற்றும் வெவ்வேறு மொழிக்கவிதைகளை ஆங்கிலத்தின் வழி தமிழாக்கி , வேறெப்படியுமே தமிழ் வாசகனின் பார்வைக்கு வர இயலாத கவிதைகளை இங்கு கொண்டு வந்து சேர்த்திருப்பது பாராட்டப்பட வேண்டியது . தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவிதைகள் ஒவ்வொன்றுமே தனித்துவமானவை என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது .
ஆந்ரி வோஸ்நஸென்ஸ்கி ஒரு கவிதையை வரையறை செய்கையில் கூறுகிறார் போல்
” a crystal , model of the world , structure of harmony , a method of thought penetrating to the essence of what is happening , a way of revealing the truth . Poetry knows no borders ; it has no capitals ,and no provinces , languages are many but poetry is one ”
Anne sexton இன் End middle beginning என்ற கவிதையை உதாரணத்துக்குப் பார்க்கலாம்
There was an unwanted child / Aborted by three modern methods / she hung on to the womb / hooked onto it / building her house into it / and it was to no avail / to black her out .. இதை வேறெப்படியும் , தன்னை விடச்சிறப்பாக மொழிபெயர்த்து விட முடியாது என்கின்ற நம்பிக்கை வாசகன் மனதிலும் ஏற்படுமாறு தமிழாக்கி இருக்கிறார் பத்மஜா ..
யாருக்குமே வேண்டாததாய் / ஒரு குழந்தை இருந்தாள் / மூன்று நவீன முறைகளில் / கருவிலேயே சிதைக்க முயலப்பட்ட
கருவறையை பற்றிக் கொண்டு / அதனோடு பிணைந்து / தன் வீட்டை அமைத்துக்கொண்ட / அவளை / எந்த ஒரு முறையாலும் / இல்லாமலாக்க இயலவில்லை -
இப்படி !
மொழிபெயர்ப்பு என்று வரும் போது நாம் சந்திக்கும் சிக்கல்கள் தான் எத்தனை எத்தனை ! நம் மொழி வளம் அல்லது அதன் குறைபாடுகளை , அதன் எல்லைகளைச் , சந்திக்க நேருகிறது . இந்த இடர்ப்பாடுகளை எல்லாம் மீறி மூலத்தை எழுதிய கவிஞனின் எல்லைக்குள் அத்துமீறாமலும் கவிதையை சிதைத்துவிடாமலும் , சாரம் இழந்து போகாமலும் பெரிய சமரசம் எதுவும் செய்து விடாமலும் ஓரளவுக்காவது original க்கு நியாயம் செய்வது என்பது பிரம்மப்பிரயத்தனம் தான் . பத்மஜா அதில் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் .
குடும்ப அமைப்பிலும் சமூகத்திலும் எத்தனையோ குரூரங்களையும் வன்முறைகளையும் சந்தித்துக்கொண்டிருக்கும் நமக்கு , நாடுகளுக்கிடையிலான போர்கள் , அந்நாட்டின் மக்களுக்கு – குறிப்பாக குழந்தைகளிடத்து ஏற்படுத்தும் விளைவுகளை //எழுதும் விரல்களின் கண்ணீரால் // சொல்லும் கவிதை நிஸ்ஸார் கப்பானியின் அரேபியக் கவிதை ” வரைதலில் ஒரு படம் ” . ஒரே ஒரு படம் வரைந்து கொடுக்கக் கோரும் மகனுக்கு , போரினால் சிதைந்து உருக்குலைந்திருக்கும் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தந்தை மகன் ஒரு பறவையைக் கேட்கும் இடத்தில் சிறையையும் , கோதுமைச்செடியை வரையாமல் துப்பாக்கியையும் வரைந்து காட்டுகிறான் ..
மகன் தன் பேனாவையும் / வண்ண பென்சில்களையும் / என் முன் வைத்து / எனக்கான ஒரு தாய்நாட்டை வரையுங்கள் என்கிறான் / கையில் எடுத்த தூரிகை நடுங்க / உடைந்து அழுகிறேன் நான் .. என்று முடிகிறது கவிதை .
வாசிக்கும் யாரையும் சில தினங்களுக்கேனும் சமன் குலையைச்செய்யும் , வாசித்த நிமிடம் மனம் கசந்து , நம் குழந்தைகளின் உலகில் இத்தனை அவநம்பிக்கையையும் வன்முறையையும் நாம் விதைத்து விட்டோமா என எண்ணி குமுற வைக்கும் கவிதை ! தொகுப்பின் மொழிபெயர்ப்புக்கவிதைகளில் என்னை வெகுவாக உணர்ச்சி வசப்படச்செய்தது இந்தக் கவிதையே .
தனக்கு மிகவும் பிரியமான ஒரு பூச்சாடிக்கென மலர்களைச் சேகரிக்கும் சிறுமியைப் போல காதல் , வேட்கை எனவும் மொழிபெயர்ப்புக்கவிதைகள் தேர்வில் பிரத்யேக கவனம் கொண்டு மனம் பிறழ்ந்தவர்கள் பற்றின ஒன்று , பெண்ணியக் கவிதை , பெண் சிசுக்கொலை மற்றும் பெண் நிலையைச் சித்தரிப்பது , ஆணும் பெண்ணுமாய் இருக்கும் அர்த்தநாரிகள் பற்றியது என்று ஆர்வத்தோடு எழுதிச் சேகரித்துத் தொகுத்திருக்கிறார் பத்மஜா . நல்ல கவிதைகளைத் தேடும் வாசகனின் முன் நீண்டிருக்கும் .. காதலை , துயரத்தை , தீராத்தனிமையை , அர்த்தநாரிக்களின் சாபக்கனலை , தோட்டாக்களின் எரி மணத்துடன் கலந்து கமழும் ஒரு பூச்செண்டு இது ..
..ஷஹி ..

Saturday, September 26, 2015

ஒரு காதல் தேவதை பூமிக்கு வந்தாள் ( மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் நூலுக்கு தமிழரசியின் விமர்சனம் )



 மெல்ல இருளில் வீழ்ந்த என் நிழலின் மேல் பாயாமல் நடக்கிறது வெளிச்சம். ஒரு இலக்கிய தாகத்தில் நா வரண்டு இலக்கியம் பருக எனக்கும் ஆசை ஆனால் இலக்கியம் அறியேன். இத்தனை நாள் பத்மாவின் கவிதைக்கு விமர்ச்சனம் எழுத நான் தகுதியானவளா என ஆராயவே தாமதம், இல்லையென தெரிந்தும் மனதின் உந்துதலால் எழுதியே விட்டேன்..............!!

சற்று நேரம் உடன் வாருங்களேன் பயணிப்போம்..

என்னையும் காட்டிகொடுத்து விட்டுப்போகிறது “ மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் “.

என்னை பின் தொடரவோ முன் சென்றுக்கொண்டோ யாருமில்லாது தனிமையில் என் பாதையை கடப்பதாய் நினைவுகளில் நான். பல்வேறு மக்கள் பயணங்கள் கொண்டது இந்த வாழ்க்கை. இதில் எனக்கான பாதையை கடக்கும் சிலரோடு மட்டுமே என்னை கண்டும் ஒப்பிட்டும் கணக்கோடும் ஒன்றியும் வாழமுடியும். இப்படியானதொரு தருணத்தில் அறிந்துக்கொண்டேன் எனக்கு முன், பின் சற்றேரக்குறைய தான் பயணித்துக்கொண்டிருக்கிறார் பத்மா உணர்வுகளால்.

உலகம் உருண்டை இந்த உண்மை அல்ல இப்போது எந்தன் கருத்து. நமக்கான மனிதர்கள் நம்மோடு வாழ்வதாய் கொஞ்சம் முதுகில் வருடி தோள் நிமிர்த்தி கன்னத்தில் முத்தமிட்டு வா பெண்ணே என்னோடு என நடை போட துணைக்கழைக்கிறது இவருடைய “ மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் “

எத்தனை உணர்வுகளை, ஆக்கங்களை, வலிகளை, நிராகரிப்புகளை, ரசனைகளை, வாழ்வியலை, கொண்டாட்டத்தை, எதார்த்தங்களை 96 பக்கங்களில் 70 கவிதைகளில் நிரப்பி தன் காகித கப்பலில் நம்மையும் பயணியாய் பிரயாணம் செய்வித்திருப்பது இவர் கவிதையின் சிறப்பு. ஒரு சேலை ஒன்றை வாங்கினாலே மனக்கணக்கில் அளந்து அணிந்து அழகு பார்க்கும் நம் திறமை இப்படியான சூழலில் இந்த கவிதைகள் நம் கடந்த நிகழ் எதிர் என முக்காலத்தையும் உடன் கொண்டு வர தவறவில்லை.

சேலை ஒன்றை வாங்க முடிவெடுத்ததும் நிறம், வாகு, துணியின் தன்மை, விலை, கடை, உடுக்க போகும் நிகழ்வு என மட்டும் மனம் அசைப்போடும். ஆனால் “ புடவை “ என்னும் கவிதையில் சொல்கிறார் ஆசிர்வதிர்க்கப்பட்ட சேலைகள் என்ற ஒரு புது சொல்லை.. சற்றே வியக்கிறேன். உண்மை தான் இதுகாலும் எனக்கேன் இப்படி ஒரு சொல்லோ அதன் சரியான அர்த்தமோ எட்டவே இல்லையென்று அதோடு மட்டுமின்றி சில சேலையின் அழகு “ களைதலிலும், கலையிலும் “ உள்ளதென்று சேலையின் மேல் காதல் உள்ளோர்க்கு சேலை களைதலிலும் கலையே என்று காதல் ரசம் பொங்க செய்திருக்கிறார் தன் வரிகளில்..!!

“தனிமை பயணங்கள் “ என்ற ஒரு கவிதையில் உறவும் அன்புக்கும் துணைக்கும் மட்டுமல்ல ஒரு பயணத்துக்கும் சில ஆசைகளும் தேவைகளும் இருக்கிறதென்றும் இல்லாத போதின் வலியை சட்டென்று நாமே ”உச்” கொட்டவைக்கும் அனிச்சை செயலுக்கு நம்மை அழைத்து செல்கிறது கவிதை..!!

“ கரை ஒதுங்கிய கப்பல் “ என்ற கவிதை நாணம் சிந்திக்கொண்டே மெல்லமாய் சிணுங்குகிறது “ ஃப்ளீஸ் டா”வென்று..!!

“ கல்லாட்டம் “ இதில் ஒரு உறவாக்கம் செய்திருக்கிறாள் பத்மா..!!

“ பொறியில் சிக்குதல் “ நாம் சிக்கி தவித்ததையும் ஸ்லாகித்தைதையும் பச்சையம் பூசி கொண்டு வருகிறது கண் முன்னே..!!

“ கன்ஃபார்ம்ட்” இது இன்னும் நம் சமுகம் கழிவிரக்கமற்ற தன்மையில் இருந்து ஒரு துளியேனும் மேம்படவில்லை என்பது எடுத்து சொல்வதோடு அல்லாது சற்றே கோபப்படவும் வைக்கிறது..!!!

“எப்படி இயலும் “ உணர்ந்தால் அன்றி அறிய இயலாது எப்படி இயலுமென்பதின் நிதர்சணம்

“ கதவிலக்கம் தொலைத்த வீடு “ இப்படி வீட்டை கடக்காது நிறையாது நம் இலக்கம்.

“அம்மா ‘ வில் தாய்மை பேசியிருக்கிறாள் இந்த தாயும்.!!

காகித கப்பல்களாய் கவிதை புத்தகமெங்கும் காதல் நீரில் மிதந்த கவிதைகள் அதிகம் இதில். அவை காதலில் ஊறி நனைந்து அமிழ்ந்து பிய்ந்த போதும் காதல் காற்றில் ரீங்காரமிட்டு நம் காதுகளை நிரப்ப தவறவில்லை.

குறிப்பாக காதல் கவிதைகளில் பத்மா நம்மை சிறிது நேரம் கற்பனையில் லயிக்க வைத்து காதலின் நிகழ்கால உணர்வை பிரதிபலிக்க செய்துவிட்டிருக்கிறார். ஒரு மேடை பாடகனின் கழுத்தில் இருக்கும் மரு கூட கொண்டாடப்பட்டிருக்கிறது இவர் கவிதையில் காதலாய்..காகித கப்பல்களில் இவர் ஆசைகளை நிரப்பி பயணிக்க செய்து இதழ்களற்ற பெண்ணாய் காத்திருந்த தருணம் ராட்சஸி காதல் சுரபியா நீ..!!

“ கடைசி முத்தம்” என் புரிதலில் செத்துப்போனேன் நான்...............!!

அப்பப்ப்ப்பபா காதலை முத்தத்தையை இப்படியா கொண்டாடுவாய் நீ..பாரேன் எனக்கு இப்போது என் காதலனிடம் முத்தம் கேட்டு யாசிக்க தோன்றுதே...!!

மேற்கூறிய யாவும் முகப்பூச்சற்ற பத்மாவின் எழுத்துக்களுக்கு என் மனம் கனிந்த கருத்துக்களே.. நட்பென்ற ஒன்றை இதில் நான் கொண்டு வரவே நினைக்கவில்லை, எழுத்தை ரசிக்க வாசிக்க உணர முகமும் நட்பும் தேவையற்றதாய் தோன்றியது இவர் கவிதைகளை நான் சிலாகித்த நொடிகள். நான் என் நிஜக்கண்களில் நிரப்பி அனுப்பும் அன்பை உன் காதல் கவிதைகளுக்கு தந்த முத்தங்களாய் இட்டுக்கொள் பத்மா..!!

நம்மை நாம் ஒரு தரம் திரும்பி பார்த்துக்கொள்ள நினைத்தோமானால் அல்லது சற்று நேரம் ஒரு புதிய உணர்வொன்றில் லயிக்க விரும்பினால் மிகவும் சரியான தேடலாய் அமையும் “ மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் “

“ காதலரசியடி நீ பத்மா...!!! “


புத்தகம் வாங்க தொடர்புக்கு:

திரு. வேடியப்பன்
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு
எண் ; 6 மஹாவீர் காம்ப்ளக்ஸ்
முனுசாமி சாலை
கே. கே நகர் மேற்கு
சென்னை - 78
அலை பேசி எண் : 044 65157525, 9940446650

Tuesday, June 23, 2015

மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் குறித்து தமிழச்சி தங்கபாண்டியனின் விமர்சனம்

"நம்பிக்கையின் ஒளியோடும், எளிமையின் வனப்போடும் பயணிக்கின்ற அரளிப் பூக்களும் சில முத்தங்களும்"


பத்மஜா நாராயணின் 'மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்' - (பிப்ரவரி, 2013)
கவிதைத் தொகுப்பை முன்வைத்து ஒரு பகிரல்
"மதத்தின் இடத்தைக் கவிதை
எடுத்துக் கொண்டுவிடும்"
என்று Mathew Arnold பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவதானித்தார்.
இருபதாம் நூற்றாண்டு அமெரிக்கக் கவிஞரான Wallace Stevens குறிப்பிட்டார் - "After one has abandoned belief in God, Poetry is the essence which takes its place as life's redemption".
"ஒரே சமயத்தில் பூத்துதிர்ந்த வாகை" எனத் தன் கவிதைகளைத் தந்திருக்கும் பத்மஜாவிற்கு "மலைப்பாதையில் வெளிச்சம் கிடைத்திருக்கிறது". கடவுளின் இடத்தை மட்டுமல்ல - கவிதை எல்லாவிதமான பொய்த்துப் போன நம்பிக்கைகளின் இடத்தையும் இட்டு நிரம்பும் எனும் என் நம்பிக்கை ஒவ்வொரு புதிய கவிதைத் தொகுப்பினை வாசிக்கையிலும் மீண்டும் உறுதிப்படுகிறது.
"ஒரு சிறுமி தன் தாய்க்குப்
பரிசளிக்கின்ற சேலையாய்"
இக்கவிதைகளை நமக்கு அவர் பரிசளித்திருக்கிறார்.
நான் அதிக மகிழ்வும் பெருமையும் கொள்கின்ற விஷயம் ஒன்று - பெரும்பாலான பெண்கள் தமது முதல் கவிதைத்தொகுப்பினை வெளியிடுகையில், அதற்கானதொரு முன்னுரையையோ, அல்லது அதன் வெளியீட்டு விழா உரையையோ, நான் பங்களித்திருக்கிறேன் என்பதே அது.
தி.பரமேஸ்வரி, சக்திஜோதி, தாராகணேசன், ச.விஜயலட்சுமி, ஈழவாணி, கீதாஞ்சலி எனும் எனது தோழிகளின் நீண்ட பட்டியலோடு, பத்மஜாவும் சேர்ந்ததினை, நான் இம்மாலை மகிழ்வோடு நினைத்துப் பார்க்கிறேன்.
ஏனெனில், ஒவ்வொரு முறை ஒரு பெண் தனது அகவொளியைக் கலையின் மூலமாக வெளிப்படுத்தும்போது, சுதந்திரத்தின் ஒளியால் அவளது அழகும், ஆன்மாவும் மேலும் மெருகேறுகின்றது. அது கவிதையா, ஓவியமா, இசையா, இலக்கியமா - அல்லது அவைஏதுமில்லையா - என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. அவள் தனக்கான ஒரு வெளியைத் தீர்மானித்துத் தன் மொழியில், சுயாதீனமாக வெளிப்படுத்த வரும்போது, அவளைத் தூக்கி, கட்டி அணைக்கவும், தோள் கொடுக்கவும், கைகுலுக்கவும், நாம் தயாராகக் காத்திருக்க வேண்டும். காலம் காலமாக அடக்கப்பட்ட அவளது நாவு எச்சிலை உமிழ்ந்தால் கூட அது எனக்கு அமுதம்தான்.
அவ்வகையில் பத்மஜா எனக்கு மிக முக்கியமானவர். ஒரு வாசகியாக, நல்ல ரசிகையாக எனக்கு அறிமுகமாகிச் சக படைப்பாளியாக என்னோடு இணைந்து கொண்டிருக்கின்ற அவர் இணையத்தில் எழுதியவற்றை இங்கே அச்சு வடிவில் கொணர்ந்திருக்கிறார். வாழ்த்துக்கள். அவரை அறிமுகப்படுத்திய எனதருமைத் தோழன், அன்பு அமிர்தம் சூர்யாவிற்கு நன்றி.
என் நேசத்திற்கும், மிகுந்த மரியாதைக்குமுரிய கலாப்பிரியா, திரு. ராஜசுந்தரராஜன் (இவரது கவிதைகளின் தீரா ரசிகை நான்) ஆகியோரது முன்னுரையுடன் நேர்த்தியாக வடிவமைத்து கொணர்ந்திருக்கின்ற வேடியப்பனுக்குப் பாராட்டுக்கள்.
எனது ப்ரிய கலாப்பரியாவின்
"பழகிப் போகும்...
பஸ்ஸீக்கு ப் பாதையும்
பாதைக்குப் பஸ்ஸீம்"
எனும் மறக்காத கவிதையைப் போலவே –
எனது மரியாதைக்குரிய திரு.ராஜசுந்தரராஜனின் பின்வருகின்ற, எனக்கு மிகப் பிடித்த
அப்படி ஒரு நிலமை
வரும் என்றால் அக்கணமே
வாழோம் என்றிருந்தோம்.
வந்தது
அப்படியும் வாழ்கிறோம்
நம்மோடு நாம் காண
இத்தென்னைகள் தம்மேனி
வடுக்கள் தாங்கி.
இக்கவிதையைப் போலவே... பத்மஜாவிடம் சில உண்டு -
"ஒவ்வொரு புடவையும்
நெய்யப்படும் போதே
தான் யாருக்கெனத் தீர்மானித்துக்கொள்கிறது
சில சேலைகள்
கலை(ளை)யும் போதே
மிக அழகாய்த் தெரிகின்றன"
என பத்மஜா சொல்கையில், objection your honour எனப் பெண்ணியவாதிகள் குரல் கொடுப்பார்கள் என்றாலும், எனக்குப் பிடித்திருக்கிறது.
கவிதை எழுதுவதற்கும், வெளியிடுவதற்கும் வயது ஒரு தடையல்ல. 'லாவண்யா' என்றொரு கவிஞர் தனது 55ம் வயதில் முதன் முதலாக, தன் "இன்னும் வரவில்லை உன் நத்தை ரயில்" என்றொரு தொகுப்பை வெளியிட்டவர். அதற்குப் பின் 12 வருடங்கள் கழித்துத் தனது 67 வயதில் இரண்டாவது கவிதைத் தொகுப்பினை வெளியிடுகிறார். அவரது மொத்த இலக்கியப் பங்களிப்பு இவ்வளவுதான். ஆனாலும் அவர் நமக்கு முக்கியமானவர் - அறிந்து கொள்ளப்படவேண்டியவர். பத்மஜாவும் அப்படித்தான். லாவண்யாவின் படைப்பு வெளியைப் பற்றி என் அன்பிற்குரிய அய்யா திரு.வெங்கட்சாமிநாதன் பதிந்திருக்கின்ற கருத்தே பத்மஜாவிற்கும் பொருந்தும்.
"தன் கவித்துவ ஆற்றலால் தமிழ் இலக்கியத்திற்கு தன் பங்களிப்பு என்று ஆவேசமுற்றுப் படைத்தவை அல்ல லாவண்யாவின் கவிதைகள். அத்தகைய ஆவேசம் ஏதும் இவரது ஆளுமையில் இல்லை. தான் தன் காலத்தில் தன்னைச் சுற்றிய உலகில் காணும் நிகழ்வுகள் தன்னைப் பாதித்த, தான் அவற்றை உணர்ந்த பாங்கில் அது தன் சம காலத்தியவர் உணர்ந்ததிலிருந்து வேறு பட்டிருப்பதைப் பதிவு செய்யும் உந்துதலில் பிறந்தவை இக்கவிதைகள். தன் உணர்வுகளும் தன்னை அவை பாதித்ததும் மற்றவர்களிடமிருந்து வேறு பட்டிருப்பதே பதிவாகியுள்ளன. ரொம்பவும் பணிவும் அடக்கமும் கொண்டவர். புதுக்கவிதை வடிவம் தந்த துணிவில் ஏதோ தனக்குப் பட்டதை எழுத வந்தவர். இவர் பயமுறுத்துபவர் இல்லை" - என்று லாவண்யா குறித்துப் பதிகிறார் வே.சா.
பத்மஜாவின் கவிதைகளும் அப்படித்தான் - காதலை, நேசத்தை, ஒரு பெண்ணின் அனைத்து பருவத்திற்கான மனோ உணர்வை, காதலும், காமமும் ஒன்றாகும் லயத்தை மட்டுமல்ல, அவளது "பாழாய்ப்போன மனசை"யும் நம்முடன் பகிர்கின்றன. கூடவே, தன்னைக் கொன்றாலும் தனது கனவினைக் கொல்ல முடியாது எனும் தீர்க்கமானதொரு பெண் குரலையும் முன்வைக்கின்றன.
"கல்யாணம் ஆகி வந்த பிறகு குளிச்சா இல்ல?" எனும் சந்தேக அவலத்துடன் இன்றும் பெண் நோக்கப்படுவதையும், "சுமந்து, நடந்து, காத்து, நின்று இற்றுவிட்ட கால்களுடன் அவள் சிலுவை சுமப்பதையும்" சுட்டுகின்றன.
இருள், நிலா, மலை, கப்பல், ஒற்றை மீன், நட்சத்திரம், கால்கள், மரத்தாத்தன், முத்தம், நாய்க்குடைகள் - இவை உலவும் அவரது கவிதைகளை மொத்தமாய்ச் சுவைத்து முடித்தபோது ஆத்மாநாமின் இக்கவிதை வரிகளை நினைத்தேன் –
"அற்புத மரங்களின் அணைப்பில்
நான் ஒரு காற்றாடி.
வேப்ப மரக்கிளைகளின் இடையே
நான் ஒரு சூரிய ரேகை.
பப்பாளிச் செடிகளின் நடுவே
நான் ஒரு இனிமை
சடைசடையாய்த் தொங்கும் கொடிகளில்
நான் ஒரு நட்சத்திரம்"
எனக்கு மட்டுமல்ல - பத்மஜாவிற்கும் கவிமனசு அப்படித்தான். நாமெல்லாம் - கவிதை என்ற ஒன்றையே ஒளியில் நெய்து கொண்டும், இருளில் போர்த்திக் கொண்டும் கனவுகளில் விழிக்கிறோம் - நனவில் தூங்குகிறோம் - மிக முக்கியமாக 'நனவிலியில்' வாழ்கிறோம்.
ஆத்மாநாம் எனக்கு மிகப் பிடித்த கவிஞர். பத்மஜாவின் முத்தம் குறித்த அருமையான பதிவுகள் இத்தொகுப்பில், அவரது நான்கு கவிதைகளில் உள்ளது. அவை ஆத்மநாமை எனக்கு நினைவூட்டின.
"பாடகன்" பாடுகின்றான்.
அவனது இசையை மனம் ரசிக்கவில்லை
இசை புக மறுத்து,
உன் கழுத்து மருவை நாவால் வருடி
யாராவது முத்தமிட்டு இருப்பார்களா?
என்ற கேள்வியே மேலோங்கி நின்றது.
"நீ எனக்குத் தர நினைக்கும் சின்ன முத்தம்
ஒரு சிவப்பு அரளியாய் என் மீது வாசம் வீசட்டும்"
இன்னொன்று "கடைசி முத்தம்", மூன்றாவதாக "; வளரும் முத்தம்" எனும் தலைப்பில் ஒரு மிக அருமையான கவிதை.
வளரும் முத்தம்
தராமல் போன முத்தமொன்று
நம்மிடையே வளர்ந்துகொண்டே
போகிறது
எந்த ஒரு கட்டுக்கும்
அடங்காமல்
உடன் என்னிடம் சேர
துடிக்கிறது
அதில் நேற்று முளைத்த
சிறகுகள்
என் வயிற்றினுள்
படபடத்துக் கொள்கின்றன
என் ஒரு சிறுமுத்தம்
போதும்
அதை மரணிக்க
இல்லை ஒரு சொல்
மாத்திரம்!
இருந்தும்
பேருரு எடுக்கும் அதனை
புன்னகையோடே வளரவிடுகிறேன்
வியாபித்து
என்னையது
கொல்லும் நாளுக்காக!
ஒரு புன்னகைக்கு எப்படி மறுபுன்னகை பதிலோ அப்படித்தான் ஒரு முத்தத்திற்கும். மேற்சொன்ன கவிதையைப் படித்தவுடன் என் நேசிப்பிற்குரிய ஆத்மாநாமின் அந்த அதி அற்புதமான 'முத்தம்' கவிதை நினைவிற்கு வந்தது. 'கவிதைகளை யாரும் நம்மிடமிருந்து பிதுக்கி எடுத்துவிட முடியாது" (இந்திரன்) என்பதை விளக்கும் அற்புதமான ஆத்மாநாமின் இக்கவிதை இந்த 21ம் நூற்றாண்டிற்கான அவநம்பிக்கைக்கு மாற்றாக 'முத்தத்தை' - அன்பை முன்வைக்கிறது.
முத்தம்
முத்தம் கொடுங்கள்
பரபரத்து
நீங்கள்
முன்னேறிக்கொண்டிருக்கையில்
உங்கள் நண்பி வந்தால்
எந்தத் தயக்கமும் இன்றி
இறுகக் கட்டித் தழுவி
இதமாக
தொடர்ந்து
நீண்டதாக
முத்தம் கொடுங்கள்
உங்களைப் பார்த்து
மற்றவர்களும்
அவரவர்
நண்பிகளுக்கு முத்தம் கொடுக்கட்டும்
விடுதலையின் சின்னம் முத்தம்
முத்தம் கொடுத்ததும்
மறந்துவிட்டு
சங்கமமாகிவிடுவீர்கள்
பஸ் நிலையத்தில்
ரயிலடியில்
நூலகத்தில்
நெரிசற்பூங்காக்களில்
விற்பனை அங்காடிகளில்
வீடு சிறுத்து
நகர் பெருத்த
சந்தடி மிகுந்த தெருக்களில்
முத்தம் ஒன்றுதான் ஒரே வழி
கைவிடாதீர்கள் முத்தத்தை
உங்கள் அன்பைக் தெரிவிக்க
ஸாகஸத்தைத் தெரிவிக்க
இருக்கும் சில நொடிகளில்
உங்கள் இருப்பை நிரூபிக்க
முத்தத்தை விட
சிறந்ததோர் சாதனம்
கிடைப்பதரிது
ஆரம்பித்துவிடுங்கள்
முத்த அலுவலை
இன்றே
இப்பொழுதே
இக்கணமே
உம் சீக்கிரம்
உங்கள் அடுத்த காதலி
காத்திருக்கிறாள்
முன்னேறுங்கள்
கிறிஸ்து பிறந்து
இரண்டாயிரம் வருடங்கள் கழித்து
இருபத்தியோறாம் நூற்றாண்டை
நெருங்கிக்கொண்டிருக்கின்றோம்
ஆபாச உடலசைவுகளை ஒழித்து
சுத்தமாக
முத்தம்
முத்தத்தோடு முத்தம்
என்று
முத்த சகாப்தத்தைத்
துவங்குங்கள்.
கிரேக்க புராணம் - காதலன் நிழல்சுவற்றில் தெரிய, அதை வரையக் காதலி முற்பட்டதிலிருந்து ஓவியம் தொடங்குவதாக நம்புகின்றது. எனக்கென்னவோ பத்மஜா அன்பின் பிம்பங்கள் தன் முன் தோன்ற, அதை வரைய முற்படுகையில், கவிதையினைக் கண்டெடுத்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. மிக எளிமையான நேர் மொழியில் அவரது "எரி நிழல்" கவிதை அதைச் செய்கிறது.
எரி நிழல்
உன் தண்முகம்
கண்டேனில்லை
உன் புன்சிரி
கண்டேனில்லை
உன் குறுவிழி
கண்டேனில்லை
உன் திமிர்நடை
கண்டேனில்லை
உன் உயிர்ப்பார்வை
கண்டேனில்லை
உன்பருந்தோள்
கண்டேனில்லை
உன் நெடுமார்பு
கண்டேனில்லை
உன் கடி மெய்யும்
கண்டேனில்லை
கண்டதெல்லாம்
அது யாதெனின்
உன் மனம்
என் அகம் பற்றியதும்
பற்றியெரியும்
என் நிழலைத்தான்.
"தொலைதூர மலையொன்று
உயிரோடு உறுமாறும் உன் கண் முன்னால்"
என்றொரு அருமையான வரியை எழுதிய கவிஞர் இந்திரன் மிகச் சிறந்த கலை விமர்சகர். அவர் ஒரு முறை சொன்னார் –
"வெறும் காட்சிப் படிமங்களை உருவாக்கி
காட்டுவது ஒவியர்களின் வேலை -
கவிஞர்களின் வேலை அல்ல"
என்று.
உடனே அதற்கு மிகச் சரியானதொரு உதாரணமாக எனக்கு நினைவிற்கு வந்தது பிரமிளின்,
"நட்சத்திரங்களை விட நிறையவே பேசுவது
அவற்றிற்கிடைேயுய்ளள இருள்"
எனும் வரிதான்.
"இருளின் நிறம்" என்கிற கவிதையில் அடர் இருளில் தன் மீதுபட்ட நகக்கீறல் ஒளியாகக் கிளருகின்ற ஒரு படிமத்தை முன்வைக்கிறார் பத்மஜா.
இருளின் நிறம்
இருளின் நிறத்தைக் கண்டுபிடிக்க முயன்றோம்
நாம் அன்று
ஜன்னலின் சிறுதுளையில் நுழைந்த
நிலாக்கீற்றைக் கூட அடைத்து
சுற்றிச் சுற்றி பார்த்தாய் நீ
நம் நான்கு கண்கள்
மட்டும் பளிங்காய் ஒளிர்ந்தன
மூக்குத்தி! என்றாய்
சிறு ஒளியாம் அதனை கழற்றி ஒளித்துவைத்தேன்
இருட்டின் நிறம் அருகிவிட்டது
கண்ணுக்குத் தெரியா கருநீலத்தில் மூழ்கிக் கிடக்கும்
அவ்வமயம்
அறியாது உன் நகம்
என் மீது பட்டதில் கிளர்ந்த பேர் சுடரில் இருள்
சட்டென போயே போய்விட்டது
எப்போதாவது இருளின் நிறம்
கண்டுபிடிப்போமா நாம்?
"இருட்டின் நிறம் அருகிவிட்டது" என்னை நிறுத்தி வைத்த, வியக்க வைத்த சொற்பிரயோகம் இது.
அபியின் சாகாவரம் பெற்ற "தன் அடர்த்திக்குத் தானே திகைக்கும் இருள்" எனும் வரி இங்கு நினைவிலாடியது.
"நம்மைச் சுற்றிலும் காலாவதியாகிப் போன உவமைகள் ஏராளம். மிக உன்னதமான உவமைகள் நம்முடன் பழகியதின் காரணமாக அவற்றின் புதுமைப் பண்பை இழந்திருக்கின்றன. (உம்) 'நாற்காலியின் கால்' (இந்திரன்)"
Password - கடவுச்சொல் நம்மோடு அன்றாடம் பழகிவருகின்ற சொல். ஆனால் அதனைப் புதுமையாகக் காதலன் பெயரைக் கடவுச் சொல்லாக வைக்கின்ற உவமையினைக் கையாள்கிறார் பத்மஜா தன் 'கரை ஒதுங்கிய கப்பல்' எனும் கவிதையில்-
கரை ஒதுங்கிய ஒரு கப்பல்
கப்பல் ஒன்று கரை ஒதுங்கியதாய்
ஊரெல்லாம் ஒரே புரளி!
அதனுள் செல்ல, கடவுச் சொல்
அதன் பெறுநருக்கு மட்டும் தெரியுமாம்...
ஊரையே கூட்டி முயல்கிறது அரசு!
என் முறை வருமுன்னே எப்படியாவது அதை
மாற்றிவிடு
இல்லையெனில்
எனக்கு மட்டும் தெரிந்த கடவுச் சொல்லான
உன் பெயரை
உலகின் முன் எப்படி உரக்கச் சொல்வேன் நான்?
ப்ளீஸ் டா!
"இரண்டு சோம்பிய முதலைகளாய்
வெளி வெறித்துக கிடந்தோம்
வந்து வீழ்ந்தது ஒரு துளி மழை.
வாலசைக்க மறுக்கும் பல்லியாய் உளவாங்கி உறிஞ்சினோம்"
என்பவையும் அன்றாடம் நம்மோடு பழகிய, ஆனால் புதுமை இழக்காத உவமைகள் - பாராட்டுகள் பத்மஜா!
தனக்குத் தெரிந்த, தான் அனுபவித்த உலகத்தையே பாசாங்கின்றித் தருகிறார் பத்மஜா - ஜிமிக்கியோடும், தாவணியோடும், அக்கா அண்ணியான கதை, பிண்டங்காக்கை பாட்டி, 'ஐ லவ் யூ' கிறுக்கலை வெள்ளையடித்து அழிக்காதே என இருட்டறையிலிருந்து இறைஞ்சும் ஒரு நடுங்கும் குரல், 'திருடா, ப்ளீஸ்டா' எனும் பிச்சிச் சிணுங்கல்கள், செவி சாய்க்கும் செல்லப் பிள்ளையார்,
"ஓட்டை குழாயின் நீர்சொட்டும்
ஒலியில் நாள்தவறாது
உனது பெயர் . எப்படித் தூங்குவேன் நான்"
என அங்கலாய்க்கும் மனம்,
"உன் பழைய பனியனின், மனம்
கிளர்த்திய வேட்கைகள்" எனத் தவிக்கும் பெண்ணின் மிக இயல்பான பாலூக்கம், முதலியவற்றைப் பகிர்ந்து கொள்கின்றவை தாம் இக்கவிதைகள். இடையிடையே துர்க்கனவாய் "நாயைப் பெண்டாளும் வால் வெட்டப்பட்ட குரங்கும்" உண்டு.
அம்மா
இன்னும் சில மாதங்கள்தான்
என தீர்ப்பு வந்த நேரம்..
ஆயிரம் முறை நீ ஓதிய கடவுள் கூட
தீர்ப்பை மாற்ற விழையவில்லை
மருத்துவமனை வராண்டாவில்
வீழ்ந்து உருண்டு புரண்டு ஆழவேண்டிய
மனநிலையில் மதிய காட்சிக்குப் போனோம்
எல்லாம் சரிதான் என்ற பாவனையில்.
ஆயிற்று
ஒவ்வொருவராகக் காண வருகின்றனர்
கடைசியல் உன்னுடன் பேசுவதற்கு
உன் எதிரில் கண்ணீர்விட அஞ்சி
கல்லாய்ப் போனோம் அனைவரும்
நீ மயக்கத்தில் கண் அசந்த நேரமெல்லாம்
முகம் வெறித்து மார்பு அசைகிறதா என்று
விழித்திருந்தோம்
நீயும் நானும் தனித்திருந்த சமயம்
எனக்கு சாகும் வயசா? ஏன் இப்படி?
என்று கேட்ட கேள்விக்கு
என்ன பதில் நான் கூறியிருக்க இயலும்?
வீடு திரும்பி கார்த்திகைக்கு நீ போட்ட கோலம்
அழியாமல் இருப்பதைக்கண்டு
அதை முத்தமிட்டு உன்னைக் கூவி
அழைப்பதைக் தவிர?
அம்மா...
"கவிதாவஸ்தை" "யாருக்கும் புரியாக் கவிதை' என்ற கவிதைகளில் கவிதை எனும் ஊடகம் தன் சுயத்திற்கு அதன் தேடலுக்கு முன்பாக எவ்வுரு கொள்கிறது? எனச் சற்று உள்முகமாகப் பார்க்கவும் முயன்றிருக்கிறார்.
கவிதை எப்போதும் வாசகனின் சொத்துதான் - அவனது அதிகாரம் மட்டுமே செல்லுபடியாகின்ற அரியாசனமல்லவா அது - அதனால்தான் என் ப்ரிய ஆத்மநாம் வாசகனுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறான் இப்படி –
"சாக்கடை நீரில் வளர்ந்த
ஒரு எலுமிச்சை செடிபோல் நான்
அளிக்கும் கனிகள்
பெரிதாகவும் புளிப்புடனும் தானிருக்கும்.
கொஞ்சம் சர்க்கரையை
சேர்த்து அருந்தினால்
நல்ல பானகம் அல்லவா?"
"கவிதையில் 'நான்' எனும் சுயம் குறித்த தயக்கங்களும் சந்தேகங்களும் நவீன காலத்தில் எழுதுபவர்களுக்கு இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. கவிஞன் இந்த வாழ்க்கையிலும் சரி, கவிதையிலும் சரி, இதை எந்த அளவிற்கு உக்கிரமாக உணர்கிறானோ அந்த அளவிற்கு அந்தச் சுயத்திலிருந்து தப்பித்து "வேறு நபர்களில்" தன்னை நிறைத்துக் கொள்கிறான் என்பார் பிரம்மராஜன். பிறரின் வாழ்க்கைகளை வாழ்ந்து பார்க்கும் படைப்பாளி மனநிலைதான் அத. இதைத்தான் John Keats எனும் பெருங்கவிஞன் "Negative Capability" என்பார். இது இன்னும் நெருக்கமாகப் பத்மஜாவிற்குக் கைகூடி வருகையில், அவர் மென்மேலும் தனது கவிதைப் பாதையில் தீர்க்கமாகத், துலக்கமாகப் புலப்படுவார் என நான் நம்புகிறேன்.
பத்மஜாவை - அவரது கவிதைகளை எனக்குப் பிடித்திருப்பதற்கு மிக முக்கியமான காரணம் - அவரிடம் பிரகடனங்களோ, கோஷங்களோ, அரூப முழக்கங்களோ, போராளி முஸ்தீபுகளோ இல்லை என்பதுதான்.
இப்பொழுதெல்லாம் மிக விரைவில் இலக்கிய உலகில் பிரபலமாக வேண்டும் எனில் - குறுக்கு வழி - ஒரு கவிதைத் தொகுப்பு போடுவதுதான். அதில் மேற்சொன்ன இன்னபிற கூறுகள் இருப்பின் - அடுத்த சில மாதங்களில் spot light அவர்கள் மீதுதான். இந்தக் கூட்டத்தில், கவனிக்கப்படாத எளிமையும், முன்துறுத்திக் கொண்டு நிற்காமல், உரக்கக் கோஷமிடாத, இசங்கள், அரசியலை முன்னிறுத்தி எழுதப்படாத, செம்மையான கவிமனம் கொண்டவர்கள் பத்மஜாவைப் போல ஏராளமானோர் இங்கு உள்ளனர்.
மிகச் சமீபத்தில் நான் வாசித்த எனக்கு மிகப் பிடித்திருந்த சாம்ராஜின் வரியொன்று, "என்றுதானே சொன்னார்கள்" எனும் தொகுப்பிலிருந்து –
நவீன தமிழ்க்கவிதைகளில்
ஆசன ஆய்ணடியப்பன்கள்' ஏராளம்
காலை முறுக்கித் தோள் மேல் போட்டு -
அப்படியே தலை குப்புற நின்று -
..... நமக்கு அவையெல்லலாம் சாத்தியமில்லை
.... நமக்கு அவை தேவையுமில்லை
பத்மஜா உங்கள் வழியிலேயே ஏராளமான முத்தங்களும், அரளிப் பூக்களும், கப்பல்களும் உங்களை வழிநடத்தும் - நாங்களும் கூட வருகின்றோம்!
ஊடகங்களே... தயவுசெய்து பத்மஜா போன்றவர்களைக் கவனியுங்கள். அறிமுகப்படுத்துங்கள், பேசப்படுபவர்களாக முன்னிறுத்துங்கள். நான் பல மேடைகளில், கூட்டங்களில் சொன்னது தான் இது –
தமிழச்சி தொடங்கி .... மிகச் சிலரின் மீதே குவிக்கப்படுகின்ற கவனத்தைச், சத்தமின்றி, நம்பிக்கையின் ஒளியோடு, எளிமையின் வழியோடு, தம் அனுபவ உண்மை சார்ந்து எழுதுகின்ற ரிஷி, செ. பிருந்தா, கல்பனா, கு.உமாதேவி, அழகு நிலா, தென்றல், கனகதூரிகா, இப்படியான கவனிக்கத்தக்க பிற பெண் கவிஞர்கள் மீது உங்களது வெளிச்சத்தினைப் பாய்ச்சுங்கள். சாம்ராஜின் எனக்கு பிடித்த இன்னொரு வரி....
இப்போது தங்க நாற்கரச் சாலை
கயத்தாற்றுக்குள் நுழைவதில்லை
பாலத்தின் கீழ் எங்கோ இருக்கிறான்
பாஞ்சாலங்குறிச்சிக்காரன்....
வாசகர்களே, ஊடகங்களே - உங்கள் தங்க நாற்கரச் சாலைகளை எங்கெங்கோ இருக்கின்ற பத்மஜாவைப் போன்ற பிற ஆளுமைகளை நோக்கிச் செலுத்துங்கள் - கவனியுங்கள் - கைதூக்கவிடுங்கள் - பாராட்டுங்கள்.
அனுபவத்தைக் கால, வெளி, ஊடகங்களூடே வெளிப்படுத்துவதே கவிதை.
தேவியர் எவருக்குமே
வழங்கப்பட்டதில்லை
விசுவரூப வாய்ப்பு
என்று ஆதங்கப்படும் அன்பாதவனைப் போல, புரிந்து கொண்டு, புதிதாக எழுத வருகின்ற பெண்களை வரவேற்றுக் கொண்டாடுங்கள்!
ஒருகைப்பிடி சிந்தனை, ஒரு கைப்பிடி உணர்வு + ஒரு சிட்டிகை அனுபவத்தின் உண்மை - சேர்ந்தது கவிதை. அது உங்களுக்குக் கூடி வந்திருக்கிறது பத்மஜா. தொடருங்கள் - நிறைய எழுதுங்கள்! அதன் மூலம் எங்களோடு உங்களது பயணத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவதேவன் சொல்வது போல் - உங்கள் தனிமையின் கிண்ணம் நிரம்பி வழியட்டும் கவிதைகளால்!.

Monday, April 6, 2015

விலக்கு தோஷம்


சாய்த்து காலி செய்யப்படும்
அத்தனை குப்பைத் தொட்டிகளிலும்
நிறைந்து கிடக்கிறன
குருதி படிந்த பஞ்சுப் பொதிகள்.
விலக்கான பெண்களை
நாய்கள் துரத்துமென்றும்
பறவைகளின் நிழல்
தீட்டுத்துணியில் பட்டால்
பட்சி தோஷமென்றும்
அம்மா கூறுவாள்.
உடுத்த மாற்று இல்லா
சாலையோர தோழிகளின்,
பலமுறை உபயோகித்து,
சாக்காய் விடைத்து
தொடையெல்லாம் ரணமாக்கி
நடை மாற்றும்
அச்சுருணையில்
எந்த தோஷம் ஏறக்கூடும்?
பெண்ணாய் பிறக்க நேர்ந்ததோர்
பாவத்தைத் தவிர?

!

***** கழிப்பறையில்
செருகி இருக்கும்
கண்ணாடி தகடகளூடே
தெரிந்த உலகம் அலாதியானது.
காயும் துணியும்
தலையுலர்த்தும் பெண்ணும்
எப்போதாவது விரித்து வைத்த மெத்தையும்.....
ஆடிக்கொண்டிருந்த இரண்டு கால்கள்தான்
exhaust fan பொருத்துமுன்
கடைசியாகக் கண்டது
என்பது மட்டும்
மறந்து போக மறுக்கிறது......

Wednesday, April 1, 2015

பதினெட்டு பெண்கள், ஆறு மாநிலங்கள், மூன்று நாட்கள், ஒரே மொழி! நன்றி அம்பை!



ஊர்மிளா  பவார் .... மராட்டிய மாநிலமே அறிந்த ஒரு பெயர் .அவரின் வாழ்க்கையை நாடகமாக மாநிலமெங்கும் நிகழ்த்துகிறார்கள்.அவருடனே அமர்ந்து அவர் வாழ்க்கையை மூன்று பெண்கள் அற்புதமாக நடிக்கக் கண்டு அவரை கட்டிப் பிடித்து கண்ணீர் மல்கியது  ஒரு கணம் .

 தனியே வெளியே செல்லத் தெரியாத நீ மும்பை மக்கள் கூட்டத்தில் டக் டக் என்று கம்பீரமாய்  பயமில்லாமல் நடந்து சென்றதைப்  பார்த்த போது மனதிலொரு நிம்மதி வந்து விட்டது என்று கணவர் நெகிழ்ந்த கணத்தைக் கூறிய துளசி வேணுகோபால்,அந்த தைரியத்தைத் தந்தது லக்ஷ்மி தான்  என்று  அம்பையை அணைத்துக் கொண்ட அந்த கணம் ...

இது போன்ற கணங்களால் நிரம்பி வழிந்தன மூன்று நாட்களும் .
எழுத்தாளர் அம்பை தலைமையில் இயங்கி வரும்  SPARROW என்ற அமைப்பின் 25 ஆவது  ஆண்டு நிறைவைக் கொண்டாட நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் 18 பெண்  படைப்பாளிகள் அழைக்கப்பட்டிருந்தனர் .சென்னையில் இருந்து தமயந்தி நிழலும் நானும் சென்றிருந்தோம்.

பல்வேறு மொழிகளைப் பேசினாலும் அனைவரையும் ஒன்றாய் இணைத்தது ஏதோவொரு பொது இழை .
மும்பையின் வெய்யிலில் மூன்று மணி நேரம் பயணப்பட்டு கர்ஜத் என்ற இடத்தை அடையும் முன் இத்தகைய உணர்வுகளின் குளத்தில் மூழ்கப் போகிறோம் என்று நினைக்கவே இல்லை. 

EXPERIENCE AND EXPRESSION  என்று தலைப்பிட்ட பெரிய பெரிய எங்களின் பெயர்களையும், புகைப்படங்களையும்  தங்கிய பேனர்களைக் கண்ட போது ஆரம்பமான உற்சாகம்..கடைசி நாள் இரவில் அனைவரும் சேர்ந்து தயக்கம் களைந்து ஆடும் வரை இருந்தது.

தன்னை எழுதுதலும் ..கதைகளை எழுதுதலும்  என்ற தலைப்பு கிளப்பி விட்ட,புதைத்து வைத்திருந்த எண்ணங்கள் தான் எத்தனை ? RETROSPECTION  AND INTROSPECTION நினைத்துக் கூட பார்க்கவியலாத தருணங்களை அனைவரையும் பகிர வைக்க ,பகிர்ந்தவரும் கேட்டவர்களும் எங்கோ இது நம் கதை தான் என்றுணர்ந்து ஸ்தம்பித்து அமர்ந்திருந்தனர்.உணர்வுகளால் அடைத்துக் கொண்ட தொண்டைக்கு 2 மணிக்கு ஒருமுறை எதோ உணவு வழங்கப்பட  ஒரு சுற்று பெருத்துத் தான்  போனோம்.

நான் லெஸ்பியன் என்று சிறிதும் தயக்கமின்றி புன்சிரிப்புடன் பேட்டி தரும் ஹிந்துஸ்தானி பாடகி சுமதியின் கதையும் ,அவரின், மனதை புரட்டிப் போட்ட குரலும்,80 வயதிலும் தன கணவன் மாண்டதை கர கர வென்று கண்ணீர் விட்டுக் கலங்கி அழுத கர்நாடகாவின் நாடக நடிகை மாலத்தம்மாவின் கதையையும் அம்பை ஆவணப் படுத்தி இருக்காவிட்டால் ,இவ்வுலகிற்கே தெரியாது.
COME GIRLS! LETS CELEBRATE OURSELVES என்ற அம்பையின் உற்சாக வார்த்தைகள் எதோ ஒரு கதவைத் திறந்து தான் விட்டிருக்கின்றன.

உலகில் பல மொழிகளில் மொழி பெயர்க்கபட்டு  நாடகமாக உலாவரும், சுதா அரோராவின், ஆண்  மட்டுமே பேசும் ஓரங்க நாடகத்தைப் பற்றியோ கன்னியாகுமரியைப் பற்றிய குஜராத்தி மொழி கவிதையைப் பற்றியோ,60 வயதில் எழுத வந்து மணிப்பூர் மொழியில் சந்திரமதியாக நடித்தும் காட்டிய யங்கொம்  இந்திரா பற்றியோ,எங்களுடனே சிரித்து பேசிக்கொண்டு இருந்துவிட்டு ,மேடை ஏறி, தலையில் முக்காட்டைப் போட்டுக்  கொண்டதும் தமாஷா நடிகையாய் உருமாறிய சுஷாமா  பற்றியும்,கூடவே இருந்தாலும்,படித்திருந்தாலும் ,சிறிதே அறிந்திருந்த தமயந்தி மற்றும் புதிய மாதவி இருவரும் குரல் கம்ம கூறியவைகளையும் ...அறிந்து கொண்டதை விட ..எழுதும் அனைவருக்கும் எப்படியாவது ஒரு சலனத்தை,வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை   உருவாக்க வேண்டும் என்ற  ஒரு முனைப்பு பொதுவாய் இருக்கிறது , என்ற உண்மை எங்களை ஒன்றாக்கியது.

எத்தனை பொதுவுடமைப் பேசினாலும் பெண்களின் எழுத்து எப்பொழுதும் ஆண் , பெண், இரு பாலராலும் எதோ ஒரு வகையில்  விமர்சனத்திற்கு உள்ளாகத்தான் வேண்டியுள்ளது.  இதை  எல்லாம் மீறி ஊர்மிளா வைப் போல் இருட்டில் எழுத வேண்டியதில்லை என்றாலும் ,எழுதி எழுதி நம்மை உணர்வோம், உணர்த்துவோம் என்று நினைக்க வைத்த மூன்று நாட்கள்  அவை.
இயந்திர கதியில் இருந்து மீண்டு ,நம்மை நாமே உணர்ந்து கொள்ள பல விதத்தில் ஏற்பாடுகளைச்  செய்த அம்பைக்கும் அவரின் SPARROW  வைச் சார்ந்த குழுவினர்க்கும் எப்படி நன்றி சொல்வது?
எழுத்தும் வாசிப்பும் இன்னும் உறமாக நம்மில் திகழவேண்டும் என்ற எண்ணம் மேலும் மேலும் வலுபெற்று,expressing the experiences என்ற கோட்பாட்டு  நம் எழுத்து யாவற்றிலும் பிரதிபலிக்க வேண்டும் என்று உறுதி கொள்வதைத் தவிர ?  
 

                                                          நன்றி  அம்பை