Thursday, September 13, 2012

"சுந்தர்ஜி' இன்னும் சொல்லலாம் இவரைப் பற்றி

இதை ஒரு பின்னூட்டமாக  சுந்தர்ஜி  அவர்களின் பக்கத்தில் எழுதலாம் என்றிருந்தேன் .நிச்சயமாக அவர் இதை பிரசுரிக்க மாட்டார் ..அதனால்  ஒரு இடுகையாகவே அதை இங்கு போட்டு விடலாம் என்று ...

அவரின் விட்டுப் போன சில பக்கங்களை வாசிக்க இன்று நினைத்திருந்தேன்
வாசிக்க வாசிக்க பிரமிப்பு மேலீட பின்னூட்டமிடலாம் என்றால் சொல்ல வந்ததை சொல்லத் தெரியவில்லை.எதோ தட்டு தடுமாறி தட்டச்சுகிறேன் .

சொல்ல நினைத்தவை இதை விட பன்மடங்கு .


ஒருவன்

ரசிகனாக நினைக்கலாம்
ரசிகனாக உருவாகலாம் ..
ரசிகனாக மாறலாம்

இவர் ரசிகனாகவே  பிறந்தவர் .

இதற்கு இவர் பட்டியலிட்டிருக்கும் பாடல்களே முதல் சாட்சி .

நாளுக்கு நாள் மாறும் இவர் தளத்தின் பின் புலம் மறு சாட்சி என்றால்

இவர் கவிதைகளுக்குத் தெரிவு செய்யும் படங்கள் மற்றுமொன்று ..

இது ஒரு சின்ன உதாரணம் ..இது போக இவர் வீடு மனைவி மக்கள் நாய்குட்டி

என பட்டியலே போடலாம் ..

சரி வெறும்காண்  ரசிகர் தானா?என வினவினால் அவர் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் பாடல்கள் அனைத்தும் பலாச்சுளைகள் ..

சரி அப்புறம்?

ருசி அறிந்து உண்பவர் ..அவராலே தானே கோமளவிலாஸ் போக வேண்டும்

என்று காத்துக்கொண்டு இருக்கிறோம்?

எழுத்துக்களில் எப்போதும் தெரியும் நாசுக்கு,நல்லவற்றை உடன் போற்றும்

நல்மனது ..

ஹ்ம்ம்ம் ...

இதல்லாம் விட பல விஷயங்கள் அவரிடம் ...

for eg?

நாலு எழுத்துக்களை கிறுக்கி விட்டு (என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன் )

எதோ சாதனை செய்து விட்டோம் என்று நினைப்பவர் மத்தியில்

சாதனைகளை செய்து இதழ்கள் வெளியிட்டு,மொழி மாற்றம் செய்து,பல

ஆளுமைகளுடன் கூடவே இருந்து

பேசி, பழகி, எழுதி,பின்  அமைதியாய் இருக்கும் இவரிடம் நிச்சயம் பாடம்

படிக்கணும்.

சரி

சுந்தர்ஜியின் நண்பர் என்று சொல்ல ஒரு கொடுப்பினை வேண்டும்

ஏய் இதெல்லாம் டூ  மச்

இல்லை இல்லவேயில்லை

நண்பர் என்றால் தன்னால் முடிந்ததும்,அதை விடஅதிகமாகவும் செய்வார்

என்பதை தஞ்சை கவிராயரிடமும்,அப்பாதுரையிடமும் கேட்க வேண்டும்.

கவிராயரின் உடல் நலம் குறைந்த வேளைகளில் அவருடனே இருந்து,

அதைப்பற்றி நண்பர்களிடம் பகிர்ந்து

அப்பப்பா இருந்தால் இவர் போல ஒரு நண்பர் இருக்க வேண்டும் .


இவரிடம் பீறிடும் சமூக அக்கறை,பயணங்களில் மக்களில் சந்திக்கும் ஆர்வம்

 அவ்வப்போது  தலை காட்டும் நகைச்சுவை ..

இவை எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் எழுத்து .

ஓர் உயர்ந்த எழுத்து இதைவிட எப்படி இருக்க முடியும் ?

அவர் எழுத்துக்களைப்  படித்த பின் சிலநிமிடங்கள் ஏதும் செய்ய இயலாமல்

இருந்த தருணங்கள் உண்டு.

அவர் எழுத்துக்களை அச்சில் கண்டு பொறாமையுடன்  அவருடன்

சண்டையிட்ட நாட்கள்  உண்டு .

எல்லாம் போக அவர் எழுத்துக்கள் பிடிக்க முக்கியமான  காரணம் உண்டு ..

அவரின் எல்லா எழுத்துக்களிலும் அவரைக் காண்பது தான் அது

ஏனெனில் அவர் கூறியிருக்கிறார்
                                
                              "என் எழுத்துக்களில் நானிருக்கிறேன் "



 

Wednesday, September 12, 2012

அடகுக் கடை



எல்லா அடகுக் கடையுள்ளும்
எப்போதும் ஒரு பெண்
எதையாவது அடகு வைக்க
காத்திருக்கிறாள்.
அது அவள்
புன்னகையாக நிச்சயம் இருக்காது
விற்று விட்ட ஒன்றை
அவள் எப்படி  திருப்பி வைக்க இயலும்?
சிலநேரம்
அதிகாலையில் அடகுக்கடைக்குச்
செல்பவள்
எதோ ஒன்றை திருப்பத்தான்
சென்றிருப்பாள்
அப்போது அவள் தொலைத்த புன்னகையை
அக் கடைக்காரன்
கொசுறாக அவளிடம் கொடுத்து விடுகிறான்.
மற்றோர் இரவு
மீண்டும் அங்கு வரும் வரையில்
அவள் அதை சுமந்து கொண்டு
அலைகிறாள்
எது எப்படியிருந்தும் 
இரவு நேரங்களில்
அடகுக் கடை ஏகும்
பெண்களின் எண்ணிக்கை
குறையவே போவதில்லை
அவர்களின்
துயரைப் போலவே !

(நன்றி வெயில் நதி ..இலக்கியச்  சிற்றிதழ் )