Friday, November 16, 2012

வன்புணர்ந்த வீடுகள் வடிக்கும் கண்ணீர்



ஒரு வீடு யாரையும் எப்போதும்
வெறுப்பதே கிடையாது
அது எல்லா ரகசியங்களையும்
தன்னுளேயே பொதிந்து கொள்கிறது .

வாசற்படியில் கழற்றப் படும்
அப்பாவின் செருப்பு சுமக்கும்
கோபத்திற்கும் உற்சாகத்திற்கும்
மாறி மாறி அது தாங்குகல்லாகிறது

ஜன்னல் கம்பி தேய தேய
கனவு காணும் அக்காவின்
கன்னங்களின் பாதியை
அது ஏற்றுக் கொள்கிறது

கதவேறி காத தூரம் பறக்கும்
சின்னவனுடன்
யாருக்கும் தெரியாமல் அது
அந்தரங்க சிநேகம் கொள்கிறது

திண்ணை மூலையில்
அவ்வப்போது சாயும் பாட்டியின்
பெருமூச்சுகளின் எண்ணிக்கையை
அது மறப்பதேயில்லை.

மூக்குப் பொடியை
தேய்த்து தேய்த்து கருத்த மூலையில்
தாத்தனின் கண்ணீரையுமது
சுமந்து நிற்கிறது

சும்மாடு கழற்றி
நீர் அருந்தும் மோர்காரக் கிழவியின்
கணக்கனாய் கோடுகள் சுமந்து
அலுக்காமல் சிரிக்கிறது
 
பல பிறப்பு இறப்பின் ஆன்மாக்கள் 
பெருமூச்சுடன் உலவும் அதன் காமிரா அறை
எப்போதும் வெளிச்சம் கண்டதே இல்லை
இந்த அம்மாவைப் போலவே

படி தாண்டி உள்வரும்
அனைவரையும்
சேர்த்தணைக்கும் தாயாய்
அது அகண்டு புன்னகைக்கிறது .

காசுக்கு ஆசைப்பட்டு யாரோ ஒருவனுக்கு
விற்கப்பட்டு
வன்புணர்ச்சியாய்  அதன் கதவுகள்
உடைய நேரிடும் போது கூட
வீடு யாரையும் எப்போதும் வெறுப்பதே கிடையாது

ஆயினும் அழிந்த நம் ஆன்மாவை நினைத்து மட்டும்
காலம் கடந்த அதன் கண்களில்
வடிகின்றன  இருசொட்டுக் கண்ணீர் துளிகள்
கால வெள்ளமென .

Thursday, September 13, 2012

"சுந்தர்ஜி' இன்னும் சொல்லலாம் இவரைப் பற்றி

இதை ஒரு பின்னூட்டமாக  சுந்தர்ஜி  அவர்களின் பக்கத்தில் எழுதலாம் என்றிருந்தேன் .நிச்சயமாக அவர் இதை பிரசுரிக்க மாட்டார் ..அதனால்  ஒரு இடுகையாகவே அதை இங்கு போட்டு விடலாம் என்று ...

அவரின் விட்டுப் போன சில பக்கங்களை வாசிக்க இன்று நினைத்திருந்தேன்
வாசிக்க வாசிக்க பிரமிப்பு மேலீட பின்னூட்டமிடலாம் என்றால் சொல்ல வந்ததை சொல்லத் தெரியவில்லை.எதோ தட்டு தடுமாறி தட்டச்சுகிறேன் .

சொல்ல நினைத்தவை இதை விட பன்மடங்கு .


ஒருவன்

ரசிகனாக நினைக்கலாம்
ரசிகனாக உருவாகலாம் ..
ரசிகனாக மாறலாம்

இவர் ரசிகனாகவே  பிறந்தவர் .

இதற்கு இவர் பட்டியலிட்டிருக்கும் பாடல்களே முதல் சாட்சி .

நாளுக்கு நாள் மாறும் இவர் தளத்தின் பின் புலம் மறு சாட்சி என்றால்

இவர் கவிதைகளுக்குத் தெரிவு செய்யும் படங்கள் மற்றுமொன்று ..

இது ஒரு சின்ன உதாரணம் ..இது போக இவர் வீடு மனைவி மக்கள் நாய்குட்டி

என பட்டியலே போடலாம் ..

சரி வெறும்காண்  ரசிகர் தானா?என வினவினால் அவர் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் பாடல்கள் அனைத்தும் பலாச்சுளைகள் ..

சரி அப்புறம்?

ருசி அறிந்து உண்பவர் ..அவராலே தானே கோமளவிலாஸ் போக வேண்டும்

என்று காத்துக்கொண்டு இருக்கிறோம்?

எழுத்துக்களில் எப்போதும் தெரியும் நாசுக்கு,நல்லவற்றை உடன் போற்றும்

நல்மனது ..

ஹ்ம்ம்ம் ...

இதல்லாம் விட பல விஷயங்கள் அவரிடம் ...

for eg?

நாலு எழுத்துக்களை கிறுக்கி விட்டு (என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன் )

எதோ சாதனை செய்து விட்டோம் என்று நினைப்பவர் மத்தியில்

சாதனைகளை செய்து இதழ்கள் வெளியிட்டு,மொழி மாற்றம் செய்து,பல

ஆளுமைகளுடன் கூடவே இருந்து

பேசி, பழகி, எழுதி,பின்  அமைதியாய் இருக்கும் இவரிடம் நிச்சயம் பாடம்

படிக்கணும்.

சரி

சுந்தர்ஜியின் நண்பர் என்று சொல்ல ஒரு கொடுப்பினை வேண்டும்

ஏய் இதெல்லாம் டூ  மச்

இல்லை இல்லவேயில்லை

நண்பர் என்றால் தன்னால் முடிந்ததும்,அதை விடஅதிகமாகவும் செய்வார்

என்பதை தஞ்சை கவிராயரிடமும்,அப்பாதுரையிடமும் கேட்க வேண்டும்.

கவிராயரின் உடல் நலம் குறைந்த வேளைகளில் அவருடனே இருந்து,

அதைப்பற்றி நண்பர்களிடம் பகிர்ந்து

அப்பப்பா இருந்தால் இவர் போல ஒரு நண்பர் இருக்க வேண்டும் .


இவரிடம் பீறிடும் சமூக அக்கறை,பயணங்களில் மக்களில் சந்திக்கும் ஆர்வம்

 அவ்வப்போது  தலை காட்டும் நகைச்சுவை ..

இவை எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் எழுத்து .

ஓர் உயர்ந்த எழுத்து இதைவிட எப்படி இருக்க முடியும் ?

அவர் எழுத்துக்களைப்  படித்த பின் சிலநிமிடங்கள் ஏதும் செய்ய இயலாமல்

இருந்த தருணங்கள் உண்டு.

அவர் எழுத்துக்களை அச்சில் கண்டு பொறாமையுடன்  அவருடன்

சண்டையிட்ட நாட்கள்  உண்டு .

எல்லாம் போக அவர் எழுத்துக்கள் பிடிக்க முக்கியமான  காரணம் உண்டு ..

அவரின் எல்லா எழுத்துக்களிலும் அவரைக் காண்பது தான் அது

ஏனெனில் அவர் கூறியிருக்கிறார்
                                
                              "என் எழுத்துக்களில் நானிருக்கிறேன் "



 

Wednesday, September 12, 2012

அடகுக் கடை



எல்லா அடகுக் கடையுள்ளும்
எப்போதும் ஒரு பெண்
எதையாவது அடகு வைக்க
காத்திருக்கிறாள்.
அது அவள்
புன்னகையாக நிச்சயம் இருக்காது
விற்று விட்ட ஒன்றை
அவள் எப்படி  திருப்பி வைக்க இயலும்?
சிலநேரம்
அதிகாலையில் அடகுக்கடைக்குச்
செல்பவள்
எதோ ஒன்றை திருப்பத்தான்
சென்றிருப்பாள்
அப்போது அவள் தொலைத்த புன்னகையை
அக் கடைக்காரன்
கொசுறாக அவளிடம் கொடுத்து விடுகிறான்.
மற்றோர் இரவு
மீண்டும் அங்கு வரும் வரையில்
அவள் அதை சுமந்து கொண்டு
அலைகிறாள்
எது எப்படியிருந்தும் 
இரவு நேரங்களில்
அடகுக் கடை ஏகும்
பெண்களின் எண்ணிக்கை
குறையவே போவதில்லை
அவர்களின்
துயரைப் போலவே !

(நன்றி வெயில் நதி ..இலக்கியச்  சிற்றிதழ் )

Wednesday, August 22, 2012

நாய்க் கனவு

ஓர் அபூர்வமான
மார்கழி மழைநாளில்
வீட்டில் சரணடைந்தது
கருப்பு நாய்க் குட்டி ஒன்று .
பறந்து பறந்து
கொட்டங்கச்சி  பால் அருந்தி
தள்ளாடும் நடை மயக்க
நானறியாமல் அதன் தோழியானேன் .
அதற்கென ஒரு  கிண்ணம்
படுக்க ஒரு விரிப்பு
என பழக்கியும்
பல நாட்கள்
என் கூந்தல் கதகதப்பில்
கண்ணுறங்கும் .
குழந்தையென
ஊஞ்சலாட்டி தூங்கியபின்
அதன் முகம் பார்த்து
வினாவொன்று எழும்
என்றாவது
எப்போதாவது
அதன் கனவில்
நான் வருவேனா?


(நன்றி பூவரசி இதழ் )

Tuesday, July 24, 2012

முத்தம் சரணம் கச்சாமி



முத்தமும் முத்தமிடதலும்
அனைவருக்கும்
பிடித்ததாய் இருக்கிறது .
முத்தமொரு  தவம்
முத்தமொரு இசை
முத்தமொரு வரம்.
ஆகவே
எல்லாரையும் அத்துணை எளிதாய்
முத்தமிட இயல்வதில்லை
அப்படி எளிதாகி விட்டால்
அது முத்தமாக இல்லாது போய்விடுகிறது
முத்தத்தில் ஆன்மாக்கள் பகிரப்படுகின்றன
முன்ஜன்மத்துத் தொடர்ச்சியாய் முத்தங்கள் மலர்கின்றன.
முத்தங்களுக்கு உதடுகள்  மட்டும் போதாமல் 
அவற்றின் பாஷையும் கற்றிருக்க வேண்டியிருக்கிறது
முத்தத்தின் இசை அறிந்தவன் செவிக்குத்தான்
மற்ற எல்லா இசையும்,உணர்வுகளின் இசையாய் மாறிப்போகின்றன
முத்தத்தில் மழை பெய்யும் 
முத்தம் தீயை கொளுத்தி விசிறும்
முத்தம் சாந்தப்படுத்தி அமரும்.
முத்தம்,கொடுப்பவரைக் கொன்று
வாங்கியவரின் உயிர் பறிக்கும்.
முத்தத்தை முத்தமிட்டுக் கொண்டேயிருக்கப் பிடிக்கிறது
இவளுக்கு
இவனுக்கு
எனக்கும்
உனக்கும் .
இப்படி முத்தக் கடலில் மூழ்குபவருக்கெல்லாம்தான்
முத்தம் சரணம் கச்சாமி    

Wednesday, June 20, 2012

திரு .வேங்கடசுப்ரமணியன் ராமமூர்த்தி எழுதிய என் முதல் புத்தக மதிப்பீடு


பத்மஜா நாராயணன் அவர்களின் ”மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்” கண்ணில் பளபளக்கப் படித்தேன். கல்கி, குங்குமம், இவள் புதியவள், இணையம்(அதீதம், உயிரோசை) என்று பரவலாக எழுதிய கவிதைகளைத் திரட்டி கவிப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். எல்லாக் கவிதைகளின் க்ளைமாக்ஸிலும் தலைப்பிற்கான திரியைக் கொளுத்துகிறார். ஒரு பானைக் கவிதைகளுக்கு ஒன்றிரண்டு பதமாக இங்கே.

”பாழாய்ப்போன மனசு” படித்தவுடன் மனசோடு ஒட்டிக்கொள்கிறது. பழைய திண்ணை இடிக்கப்படாமல் இருப்பதற்கும், மல்லிப்பூ விற்கும் சிறுமி தலையில் கிள்ளுப் பூவிற்கும், இறுதி ஊர்வலம் வயதானவருக்கே என்று தெரிந்த பின்னர் தான் ஆசுவாசப்படுகிறது மனசு என்று சொல்வது ’பச்’சென்று பாழ் மனசோடு படிகிறது.

“கல்லாட்டம்” ஆடிய ஜெயந்தியக்கா பதினாறாவது வரியில் அண்ணியான கவிதை.

“கன்ஃப்ர்ம்ட்” கவிதை கர்ப்பம் கன்ஃப்ரம்டு என்ற சந்தோஷம் ஒரே கேள்வியில் துக்கமானதைச் சொல்கிறது.

Discovery Book Palace கட்டுக்கோப்பாக பதிப்பித்த கவிதைத் தொகுப்பு. திறம்பட வடிவமைத்து இலக்கியத்தரமான பதிப்புரை எழுதிய வேடியப்பனுக்கு ஒரு சபாஷ்.

Tuesday, June 19, 2012

"மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் '' புத்தக வெளியீடு

 கனவு போல் இருக்கிறது.

இங்கு நான் கவிதை எழுதத்தொடங்கியதும் அதற்கு நீங்கள் அனைவரும் பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப்படுத்தியதும்.

எதோ ஒரு பேராசையில் அதை தொகுத்து வெளியிட்டும் விட்டேன். நியாயமாக அந்த அறிவிப்பை இங்கு தான் முதலில் வெளியிட்டிருக்க வேண்டும்.பணிச்சுமையினால் பகிர முடியாமல் போய்  விட்டது.

காகிதஓடத்தில் வந்த கவிதைகளைத் தொகுத்து
"மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் ''
 என்று தலைப்பிட்டு டிஸ்கவரி புக் பாலஸின் முதல் வெளியீடாக வந்துள்ளது. இதை சாத்தியப் படுத்திய உங்கள் அனைவருக்கும் நன்றி .


நிச்சயம் நான் எதோ நற்செயல் புரிந்திருக்க வேண்டும்.அதனால்தான்  நான் பெரிதும் மதிக்கும் திரு.கலாப்ரியா அவர்களும் திரு.ராஜ சுந்தரராஜன் அவர்களும் எனக்கு முன்னுரை எழுதித் தந்துள்ளனர்.

அவர்கள் எழுதிய முன்னுரையை  அவர்களின் அனுமதியோடு முடிந்தால் பதிவேற்றம் செய்கிறேன் .

நூல் http://discoverybookpalace.com/ என்ற முகவரியில் கிடைக்கும்.

நூல் மே முப்பதன்று மதுரையில் திரு கலாப்ரியா அவர்களால் திரு.வெற்றிவேல் அவர்களின் மகனின் திருமண விழாவில்  வெளியிடப்பட்டது.
மதுரை நண்பர்கள் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சென்னையில் டிஸ்கவரி புக் பாலஸில் ஒரு அறிமுகக் கூட்டம் நடத்தலாம் என்று நினைத்திருக்கிறேன்.நண்பர்கள் கலந்து கொண்டு உற்சாகப்படுத்த வேண்டும் .

இது சாத்தியப்பட்டதில் வாசிக்கும்,வாசித்த உங்கள் அனைவருக்கும் பங்கு உண்டு.அதற்கு மனம் நெகிழ்ந்த நன்றிகள் பல.  

Monday, June 11, 2012

கருப் பொருள்


இப்போதெல்லாம்
மிக எளிதாய்  வந்தமர்கிறது
கவிதையின் கருப்பொருள்.
ஒரு கட்டடத் தொழிலாளி
வாங்கிச் செல்லும்
ஒரு சொம்பில் நிறைந்திருக்கும்
தேநீர் கூட
கவிதையுள்  வர எத்தனிக்கிறது .
கொஞ்சம் சூடு குறையட்டும்
எனக் காத்திருப்பில் அதை வைத்திருக்கிறேன் .
பூனை, நாய், எலி, யானை,
இவையெல்லாம் ஏற்கனவே
பல கவிதைகளில் வந்துவிட்டாலும்
எப்போது வேண்டுமானாலும்
உள்நுழைய ஆயத்தமாகவே
இருக்கின்றன .
இரவும், பகலும், நிலவும், காற்றும் ,
பாடப்பட்டதில் சலித்து சலசலக்கின்றன   
கால் தட்டிய கல்லும்
தினம் எடை பார்க்கும் எந்திரமும்
கழற்றி போட்ட ரவிக்கையும்
மடிக்காத போர்வையும் கூட  
எப்போதாவது
ஒரு வரிக்குள் நுழைய மாட்டோமா
என்று எதிர்பார்க்கின்றன
இத்தனை பாடுபொருள்கள் 
குவிந்து கிடைக்கையிலும்
என்று தான்
தான் எழுதப் படுவோமோ
என்ற கேள்வியோடு
காத்திருக்கிறது
ஒரு நல்ல கவிதை

  (நன்றி கல்கி )   

Wednesday, June 6, 2012

அசையுமாசை

ஜன்னல் வெளி  
தென்னங்கீற்றின்
அசைவொத்தாடுகிறது
ஒரு பெண்டுலம்
கருப்புநிறச் சேலையின் முந்தாணி
அறை மூலையில்  
கிழிந்தவொரு சிலந்திவலை
பாதி படித்து மூடிவைத்த பக்கங்கள்
இருக்கையின் மேல் போர்த்திய
சல்லாத் துணி
அசைப்பதறியாக் காற்றில்
உன்முன்னுச்சி முடி
என்னாசை போலவே         

Monday, April 16, 2012

சாத்தானும் வேதமும்




அன்றொரு நாள்
என்னிடம்
ஒரு  சாத்தான்
வேதம் ஓதிக்கொண்டிருந்தது 
அருகில் இருந்த
செடியிலிருந்து
ஒரே ஒரு துளசி கொய்து
கையில் அழுத்தமாய்
மூடி வைத்துக் கொண்டிருந்ததைக்
கண்டு
ஏளனமாய் சிரிக்கவும் செய்தது
அச்சாத்தான் .
சொல்வதற்கெல்லாம்
தலையாட்டியதைப்
பார்த்து  பரிதாபப்பட்டோ  என்னவோ
பிடியிலிருந்து விடுவித்து விட்டது

அவசர அவசரமாய்
ஆஸ்வாசப் படுத்திக் கொண்டு
உறங்கி விழித்து கண்ணாடி பார்க்கையில்
தான் தெரிந்தது.
அச்சாத்தான் போலவே
மாறியிருந்த என் முகமும்...

வழி விடுங்கள்
நானும் வேதம் ஓத புறப்பட்டு விட்டேன் .

Sunday, April 15, 2012

காலோவியம்

சிறிது மூடியிருந்த 
கதவின் இடையில் 
தெரிந்த 
உன் பாதங்களுகேற்ற 
முகத்தை 
நான் மனதில் 
வரைந்து விட்டேன் .

வரைந்த அது 
சிதையப் போகிறது 
தயவு செய்து 
என் கண்படாமல் போ நீ ! 

Wednesday, April 4, 2012

சிலுவை

என் சிலுவையில்
ஆணி அறையும் சத்தத்திற்கு
பறக்க ஏதுவாய்
பறவைகள் காத்திருக்கின்றன .

என் வழியும் குருதி
சொல்லாதவொன்றை
உடன் புரிந்து கொள்கிறது
காற்று

பசிக்கும் வயிற்றை நிரப்புமுன்
என் மரணம் காண
வாதையுருகின்றன மாக்கள் .

சுமந்த வடுவின்
பொருக்கு
என்றும் உதிராகாயமாகி
கொத்துகின்றன காக்கைகள் .

தந்தையே
சுமந்து, நடந்து,,காத்து, நின்று 
என் கால்கள் இற்றுவிட்டன .

என்னை உடன்
சவுக்கடித்துக் கொல்,
இல்லை இச் சிலுவையையாவது
சுக்கு நூறாக்கி விடு 

திங்களன்று( 2/04/2012) உயிரோசையில் வெளியானது

Monday, April 2, 2012

தொலைந்த போன பிரப்பமர பொந்து(இன்று அதீதத்தில் வெளிவந்துள்ளது )


எங்கள் தெருமுனை பிரப்ப மரத்தில் 
மூன்று பேர் நிற்கக்கூடிய  
பொந்த்தொன்றிருந்தது.

பங்குனிக் காவடி
பார்த்து ரசிக்க
அதிலேறி ஒளிவோம் .

இரவு எலெக்ட்ரிக் காவடி
வரும் போது மட்டும்
மரம் பொக்கைவாயில் சிரிப்பது போலிருக்கும்

அகாலம் வீடு திரும்பும்
எனக்காக
காத்திருக்கும்
அம்மாவிற்குத்  துணையாய்
மென் குரலில் சிலுசிலுக்கும் .

மரத்தடி மலர் காதலுக்கெல்லாம்
ஆசிர்வாதமாய்
இலை சொரியும்.

என் மகள் அதன் நிழலில்
களிக்க போட்ட கனவெல்லாம்
கலைய
புயல் காற்றில் மயங்கி சரிந்தது
அம்மரத்தாத்தன்

இன்று பங்குனி காவடி
பார்க்கும் ஆசை
மகளுக்குமில்லை
ஏறி நிற்க
அந்தப்  பொந்துமில்லை

Thursday, March 29, 2012

புடவை (இன்று குங்குமம் தோழியில் வெளியானது )

 

ஒவ்வொரு புடவையும்

நெய்யப்படும் போதே


தான் யாருக்கென


தீர்மானித்துக் கொள்கிறது




உரியவளின் கை


தன்னை தொடும் வரை


அது தன் அழகை


வெளிக்காட்டிக் கொள்வதே இல்லை


ஆயினும் சிலசமயம்


அது ஆள் மாறி சேர்ந்து விடவும் கூடும்




ஒரு சிலைக்கு


உடுத்தப்படுவோம் என்றாசை பட்ட ஒன்று


எங்கோ பிரிக்காமல்


உறங்கியே கிடப்பதுண்டு.




ஆசீர்வதிக்கப் பட்ட சேலைகள் தான்


திருமணத்திலும்


வளைகாப்பிலும்


மிளிர்கின்றன


எனினும்


ஒரு சிறுமி தன் தாய்க்கு


பரிசளிக்கும் சேலை


எல்லாவற்றிலும் உன்னதமகின்றது .




நெய்யும் போதே


வ்ரக்தி அடையும் புடவைகள்


எப்படியோ இறுதி ஊர்வலத்தில்


பங்காகின்றன




பல சேலைகளின் அழகு


அதை பிரித்து அணியும் போது தான் வெளிப்படுகிறது


ஆயின்


சில சேலைகள்


கலை(ளை)யும் போதே


மிக அழகாய் தெரிகின்றன .