Friday, December 30, 2011

விதைக்குள் ஓர் இசை

ஒவ்வொரு விதையிலும்
ஒளிந்திருக்கிறது
பிறப்பிற்கானதோர் இசை
மழையின் தாலாட்டில்
கண்ணுறங்கும் அது
ஒரு இடியோசையில்
வெடித்து பொழியத் துவங்குகிறது .
பின் பிரபஞ்சத்தின் பாடலாய்
விண் மண் வியாபிக்கிறது
வ்யாபிகின்ற அக்கானகத்தின்
ஒவ்வொரு விதையிலும்
ஒளிந்திருக்கிறது
இறப்பிற்கான
ஓர் இசையும் கூட .


(கல்கியில் வெளியான கவிதை)

Wednesday, October 26, 2011

யாருக்கும் புரியா கவிதை

தன்னை வாசிக்கும் அவனை 
உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது 
அந்தக் கவிதை .
இருவரிகட்கிடை உறை 
பொருளறியாதவன் வெறும் 
வார்த்தைகளை மட்டுமே வாசிக்கிறான் .
பின் உரக்க சிலாகிக்கிறான்.
தன்பின் மறை பொருளுணர்த்த
கவிதை கொஞ்சம் முயல்கிறது 
பின் தோற்றுச் சரிகிறது .
புரியாததொன்றை புரிந்ததென 
அவன் புன்னகைக்கையில்
உள்ளே அழுதுகொண்டிருக்கும் 
அந்தக் கவிதை
இனி என்றோ மற்றொருவன்  
படிக்க நேரும் வரை ...
  

Thursday, October 20, 2011

அஞ்சலி....திருமதி தேவி முருகதாஸ்

அருகில் ஒரு சின்ன ஊரில் கும்பாபிஷேகம் .அதில் திரு பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் கச்சேரி. .கச்சேரி என்று சொல்வதை விட நாம சங்கீர்த்தனம் என்று சொல்லுவது சரி.பார்வையாளர்கள் அனைவரையும் ஒரு சேர பாட வைத்து ஒரு விதமான புதிய அனுபவம் ஏற்படுத்தி தருவார்.
 
அவர் பாடல்கள் என்றால் என் தந்தைக்கு உயிர். தந்தையின்  மூலமாக நாங்களும் அவரை  ரசிக்கக் கற்றுக்கொண்டோம் .அக்கம் பக்கம் எங்கு கச்சேரி என்றாலும் எங்கள் வீட்டில் தான் தங்குவார் .

நாங்கள் மிகவும் சாதாரண குடும்பம்தான் .இருப்பினும் எங்களில் ஒருவராக எங்கள் தாய் தந்தையர் அவர் மேல் வைத்துள்ள பிரியத்திற்காக மிகவும் இயல்பாக எங்களோடு இருப்பார்.ஒரு கால கட்டத்தில் ஓய்வு தேவைப்பட்டால் ஓரிரு நாள் வந்து தங்கிப் போவது என்று கூட ஆனது.

நான்  8ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி. அப்போதுதான் அவர் சரோஜா என்கிற தேவி அக்காவை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு தேவி அக்கா அவர்களும் அவருடன் எங்கள் வீட்டிற்கு வரத்தொடங்கினார் .

ஒரு சாதாரண சிறிய ஊரில் வாழ்ந்து வந்த எங்களுக்கு முருகா, தேவியக்காவின் வருகை ஒரு திருவிழா போல இருக்கும் .முருகாவைப் போலவே தேவி அக்காவும் எங்களுடன் நன்கு பழகினார்.வளர்ந்து வரும் சிறுமியான எனக்கு வெளியுலகைப் பற்றி பலவிதத்தில் எடுத்து கூறுவார் .மிகவும் அழகாய் வரைவார். அவர் வீட்டில் அவர் வரைந்த அம்மன் படம் தான் பூசைக்குரியதாய்  இருக்கிறது.

என்னுள் மறைந்து கிடந்த வரையும் திறமையை வெளிக் கொண்டு வந்தவர் அவர் தான் .அவரின் காரணமாகத் தான் என் ஓரிரு ஓவியங்கள் டெல்லியில் கண்காட்சியில் வைக்கப் பட்டது .அவர்கள் வரும் போதெல்லாம் புதிய பாடல்கள் சொல்லி தருவார் .அதை பாடியே யூத்பெஸ்டிவலில் பரிசு கூட வாங்கி உள்ளேன்.

வீட்டை சுத்தமாய் வைத்துக்கொள்வதையும் ,நம்மை சுத்தமாகவும் அழகாகவும் பராமரிக்கவும் பலதும் கற்று தந்தார் .இன்று கூட என் வீட்டிற்கு வருபவர்கள் வீட்டை அழகாய் வைத்துள்ளீர்கள் என்று கூறும் போது அக்காவின் நினைவு தான் . நவராத்திரியில் அனைவரும் பாடச் சொல்லும் ஒரு ஆளாக மாறியதிற்கும் அவர்கள் தான் காரணம்.

நம் வாழ்க்கை நாமே அமைத்துக் கொள்வதில்லை. அதில் பல பேருடைய தாக்கங்கள் இருக்கத் தான் செய்யும் .அந்த விதத்தில் எங்கள் வாழ்வில் அழகுணர்ச்சி மேம்பட்டது தேவி அக்காவின் வருகையால் தான்.  

எதோ ஒரு விதத்தில் எங்கள் வாழ்வோடு சம்பந்தப் பட்ட தேவி அக்கா இன்று  இல்லை.இல்லை என்பதை நம்பவும் இயலவில்லை .முருகா அவர்களை சந்திக்கும் தைரியமும் இன்னும் வரவில்லை .

அக்காவை  நினைக்கும் போதெல்லாம் காதில் ஒலிக்கும் அவர் குரல் இனி ஒலிக்காது.. எனினும் எங்கள் வாழ்வோடு இணைந்திட்ட அவர் நினைவுகளுக்கு என்றும் சாகா வரம் தான் .  
                         WE MISS U AKKA

Tuesday, September 13, 2011

இன்று (மீள் பதிவு )


அன்று!
கண்ணிலே கனவு!
மங்கலாய் மனவெளியில்;
கனவெனினும்,
ஆழ் மனப் பெட்டகத்தில்
பூட்டிய நினைவு!
காலசுழற்சியில்
கனவுகள்! கனவுகள்!
ஆசைகளின் கூப்பாடுகள்!
நிதர்சனம் உரைத்தது
கனவு கனவுதானென்று!
நடைமுறை முரண்கள்
கனவினைக் கொல்லும்!
கல்லறைக் கனவுகள்
எனக் கற்றுத்தெளியும் நேரம்
சட்டென மீண்டும் ஒரு கனவுப் பூ!
மனமெல்லாம் பூ வாசம்!
மூடிய கதவின்
மறுபக்கம்
நிலவொளியாய்
சிறு ஜன்னல்!
நனவாகும் கனவின்
வாயிற்படியில் நான்!!!

Tuesday, May 24, 2011

மாடிப்படி பூனை

ஆம்
இது மதிலில்லைதான் 
இடமா?வலமா? 
என மயங்கி நிற்க .
ஆயின் 
மொட்டை மாடி ஆசையில்
திடுதிடுவென படியேறும் சத்தம்
திடுக்கென 
எழுப்புகையில் 
மேலா கீழா வெனக்கூட  
தேர்விருப்பதில்லை .
என்ன முயன்றும் 
வால் மிதிபடுவதும் 
(ஆ)மாறுவதில்லை .
அரைக்கண் கனவுறக்கத்திலும்
"ஹோ"வென்ற கூச்சல்
குலை நடுக்கையில்...
இடமா வலமா
என முடிவெடுக்கவாயினும் 
ஓர்  உடைந்த
குட்டிச்சுவர் இருந்து தொலைத்திருக்கலாம்
இந்த மாடிப்படி பூனைக்கு !


Wednesday, April 27, 2011

கவிதாவஸ்தை


மேகங்களில் நம் 
மனவுருவைக்  காண்பதோ 
ஒரு நாய் குட்டியை வளர்ப்பதோ 
பத்துக்கு பத்து புள்ளி வைத்து 
கோலம் போடுவது போலோ 
இல்லை 
ஒரு கவிதை வரியை எழுதுவது
முதல், ஓர் ஆணும் பெண்ணும் 
தயங்கி ,முயன்று ,வெல்லுவது 
போன்ற வாதையின் 
ஆயிரம் மடங்கு அவஸ்தையில் 
வந்து விழுகிறது 
ஒரு கவிதையின் கரு.
பின் முயங்கிக் களைத்து
புன் சிரியுடன்
கண் செருகும் 
வாலிபத்தின்  வனப்போடு 
அதன் முதல் வரி.
ஒரு பூனைக் குட்டியை 
தடவுவது போல் 
அவ்வளவு எளிதாக அமைவதில்லை 
அடுத்த வரியும் 
அதற்கடுத்த வரியும் கூட .... 
   
 

Tuesday, April 26, 2011

மீண்டு(ம்) வந்துவிட்டேன்


Thursday, February 17, 2011

இன்று,நாளை நேற்றாகும்

எனக்கு இப்போது புரிந்து விட்டது!
என் வருங்காலத்தை 
உயிர்ப்பிக்கப் போவது 
நீ எனும் 
கடந்த காலம் தான் .
கடந்தவைகளில் வாழாதே 
என கூறுபவர்களுக்குத் 
தெரியுமா என்ன 
நான் வாழும் 
இன்று தான் 
நாளையின் 
கடந்த காலம் என?

Sunday, February 13, 2011

சூரிய வருடல்

என்றோ தன்னைத் தொட்ட காற்று
மீண்டும் தொட வரும்  
என
வெளிசுற்றும் நான் .

காற்றலைகள் தேடி
காய்ந்த தேகம்
மேலும் மேலும் சுக்காகிறது

பாவப்பட்டு மேல்விழும்
ஓரிரு மழைத்துளிகளை
ஆங்காரத்துடன்
உதறி விலக்குகிறது.

பரிகாசத்துடன்
அதன் நைந்த ஆடைகளை
இன்றைய காற்று
இழுத்துக் கொண்டோடுகிறது ..

வெளிப்படும் புண்கள்
புரையோடியது  கண்டு
சூரிய விரல் வருடத் தொடங்க
காற்றில் தொலைத்த ஆடை மறந்து
அதை நோக்கி நகர்கிறது அது!

யாரோ
பாவம் பிச்சி !என்பது மட்டும்
ஏனோ காதில் வந்து விழுகிறது .

Saturday, January 8, 2011

கதவிலக்கம் தொலைத்த வீடு

ஒரு  காலத்தில் அதற்கு
ஒரு விலாசமென்று ஒன்று இருந்தது
சிவப்பு வர்ணமடித்த கதவும்
அதில் கட்டத்தினுள் எழுதி வைத்த இலக்கமும்... 
சாதிப் பெயரை நீக்கிய போது
அதன் அடையாள வரி ஒன்று  குறைந்தது
ஆட்சியின் புது  இலக்கமிடல் விதியில்
அதன் எண்கள் இரண்டாகி
இரண்டுங் கெட்டது
வீதி அகலமானதில்
வெளிச்சுவரும் நசுங்கி
இன்றதன் அடையாளமும்
என்றோ வரும் கடிதத்திலும்
அதன் பெயர்
'படுதா மறைத்த வீடு' என்றாகிப் போனது..
அன்று தனக்கும் ஓர் இலக்கமிருந்ததை
யாருமே வாங்கிக் கொள்ளாத
நசுங்கிய  கதவு அவ்வப்போது நினைவூட்ட
கதவிலக்கம்  தொலைத்த வீடு
படுதா காற்றிலாட
மெல்ல புன்னகைக்கிறது..
 

Sunday, January 2, 2011

என் மிகச் சிறந்த புத்தாண்டுப் பரிசு

எங்கள் வீட்டின் மற்றொரு நபர் போன்றவர்தான் சாந்தி .என் வீட்டுக்கு வந்திருப்பவர்களுக்கும் ,என்னுடன் காலை நேரம் தொலை பேசி இருப்பவர்களுக்கும் இது நன்றாகவே தெரியும்

என் உடல் நிலை காரணமாகவும் ,போதிய பழக்கமின்மையினாலும்  என் வீட்டுவேலைக்காக என் வீட்டிற்கு தினம் வருபவர் தான்.
காலைநேர பரபரப்பில் ஆயிரம் முறை  சாந்தி என்ற பெயர் உச்சரிக்கப்படும் .

மிகவும் கடமை உணர்ச்சி உடையவர்.ஒரு வேலை சொல்லி விட்டு பின் மறந்து விடலாம் மிகவும் கச்சிதமாக அது முடிக்கப்பட்டு  இருக்கும்.

யார் யாரோ வீட்டுவேலை செய்பவர்களைப் பற்றி எத்தனையோ கதைகள் கூறும் இந்த காலத்தில் ,தன்னுடையதில்லாத எந்த பொருளிலும் கொஞ்சம் கூட ஆசை வைக்காத ஜீவன் .

பல வருடங்கள் கூடவே இருப்பதால் taken for granted ஆகவே ஆகிவிட்டார் ..

ஒவ்வொரு புத்தாண்டும் என் தங்கை மகனின் பிறந்தநாளாகவும் இருப்பதால் காலையிலேயே தங்கையின் வீட்டுக்கு சென்று விடுவோம்

அதனால் அதிகாலையில் என் அக்கம் பக்கம் வீடுகளுக்கு சென்று வழக்கமாய் அவர்களுக்காக நான் வாங்கி வைத்திருந்த பரிசை கொடுத்து விட்டு வீட்டிற்கு வரும் போது தான் சாந்தி வந்தார் ..

நிறைந்த சிரிப்போடு அவருக்கு வாங்கி தந்த சேலையில் வந்து" நல்லா இருக்கா மேடம்ன்னு" வீட்டில் நுழைந்தார் ..

கையில் ஒரு பை.அதிலிருந்து ஒரு ரோஜா மலரை எடுத்து என் மகளுக்கு தந்து விட்டு, இருங்க மேடம் இதோ வரேன்னு போனவர் கையில் ஒரு தட்டு அதில் ஒரு சேலை ..

'இது உங்களுக்காக இந்த நியூஇயருக்கு" என்று கூறி கொடுத்தவுடன் நெகிழ்தே போனேன்
என் வாழ்கையிலேயே இது போன்ற ஓர் அன்பளிப்பு பெற்றுக்கொண்டதே இல்லை  என்று தோன்றியது.

"என்னை  நினைக்க யார் இருக்கிறார்கள்?" என்று  சில சமயம் தோன்றும் கழிவிரக்கத்தை கோடாலிகொண்டு வெட்டி ஒரு positiveஆன ஆண்டை எனக்கு ஆரம்பித்து வைத்தது

அவருக்கு தெரியாமல் இருக்கலாம் ..
ஆனால் எனக்கு இது ஒரு வாழ்நாள் முழுவதும்  
மறக்கவியலா அனுபவமாக அமைந்து விட்டதுதான் உண்மையிலும் உண்மை .
 ரொம்ப தேங்க்ஸ் சாந்தி !