Saturday, September 25, 2010

நாய்க்குடைகள் மலர்ந்த கொல்லை


மேலாக்கில்லாமல் 
வெளியே 
வரவே கூடாதென 
ராஜியை 
அம்மா திட்டியும் 
கேளாமல் ,
கண்ணாமூச்சி
விளையாடும் நேரம் ...
கருவம் வைத்து 
அந்த தனசேகர் 
அவள் கைப்பிடிக்கமுயன்றது
பிடிக்காமல்
அவளழுத அந்த 
மழை நின்ற மாலையில் தான்
கொல்லை முழுக்க 
நாய்க் குடைகள் 
மலர்ந்து நின்றன ..
                                                              
அவளைப் போலவே !

Sunday, September 19, 2010

நினைவலைகள்


மறக்கவியலா 
பள்ளி நாட்கள் 
என தலைப்பிட்டு 
அடித்த லூட்டியும் 
வாங்கிய அடியும் 
மகிழ்ந்த நட்பும் 
என பலதும் 
எழுத முயல்கையில் 
"என் பையன் " என் பையன் "
என 
பிணவூர்தியின் பின் 
கதறிக் கொண்டு 
ஒரு தந்தை போன 
முதன்முதலில் 
கண்ட ஒரு சிறுவனின் 
இறுதியூர்வலம்
நினைவின் முன் வந்து 
நிற்கிறது !

Monday, September 13, 2010

பாட்டியும், பிண்டக் காக்கையும்


மாமன் அகாலமாய் 
இறந்தஅன்று கூட 
முற்றத்தில் உருண்டு புரண்டு 
ஓலமிட்ட பாட்டியின் 
கண் வற்றி 
ஈரமில்லாமல் தான் இருந்தது 

 
உணர்வுகள் செத்த உடலாய்
நாளை போக்கிய அவள் 
தாத்தாவின் திவசமன்று 
காக்கைகளுக்கு 
பிண்டம் வைப்பதற்கு மாத்திரம்
வேறெவரையும் விடமாட்டாள் 


சோற்றை கொத்தும் காக்கையை  
வெறிக்கும் சமயம் மட்டும் 
அங்கோர்  உணர்வுக்குவியலாய் 
வேறொரு மனுஷுயாய் 
மாறிபோகும் அதிசயம் தான் 
என் பாட்டி 

Sunday, September 5, 2010

தேடும் தேடல்


யாராவது யாரையோ போல் தான்
இருந்துவிடுகிறார்கள் .
கண்ணோ ,மூக்கோ,நடையோ,
சாயலோ,பெயரோ,யாரையாவது ஒத்ததாக ..


யாரிலோ யாரையோ காணும் மனம்
யாரைத் தேடுகிறது யாரிலோ?


யாராவது என்னிலும் யாரையோ
காணக் கூடும் ....


யாருக்காவது யாரோவாக இருக்கும் சாத்தியம்
இருக்க வேண்டும்
என ஆசை கொண்டு
யாரிலாவது யாரையோ தேடுகிறேன் ..