Sunday, June 27, 2010

முத்தக் கப்பல்

உனக்கான என் காகிதக் கப்பலை  
நிரப்பத் துவங்கி விட்டேன்

என்ன முயன்றும் என அனைத்து பிரியமும்
அதில் கொள்ளவே இல்லை

மீதி உள்ளது 
இங்கு என்னை மூச்சு முட்டச் செய்கிறது

என்னை கேட்காமலேயே  என் ஆசை
அதை செலுத்தும் விசையாகி விட்டது

என் நிஜ முத்தங்களின்
பளு தாங்காது கப்பல்  மூழ்கிவிடும் என்பதால்

என் உதடுகளை மட்டும்
சிறிது ஒற்றி அனுப்புகிறேன்

உன்னை வந்தடையும் போது
அவை நீரிலே கரைந்து போயிருக்கலாம்

அப்போது கப்பலறியாது
அதன் மடி புதைத்திருக்கும்
என் உதடுகளை ஒரு முறை அழுந்த முத்தமிட்டு
வேகம் திருப்பி அனுப்பி விடு

உதடில்லா(து)  முத்தங்கள் இங்கு
இறந்துவிடும் முன்னே !

Saturday, June 26, 2010

காகிதக் கப்பல்

மழையின் ஈவாய்
என் வாசலில் பெருகும் சிறு நதியில்
எப்போதும் என் காகித கப்பலை
உன்னை நோக்கியே செலுத்துகின்றேன்
கவிழாமல் அது உன்னை சேரும் போது
என் பிரியச் சுமை உன்னை அடையக்கூடும்
அச்சுமை தாங்காது
உடன் என்னிடம் சேர்க்க
நீயும் ஒரு கப்பலை என்னை நோக்கி செலுத்தலாம்
பின் ஒரு நாள் பெய்யக்கூடிய மழையில்
பெருக்கெடுக்க இருக்கும் நீரின் நடுவே
எப்போதோ வரப்போகும் உன் கப்பலுக்காக
காத்து காத்து
வாசலிலேயே உறைகிறேன் நான்
வான் பொய்க்காது
காதலும் கூட !

Friday, June 25, 2010

காகிதக் கப்பலாய் மாறிய நான்

காகிதக்  கப்பல்கள் நிறைந்து பிதுங்கும்
அறையில் நசுங்கியபடி நான் .

ஒரு துளி மழை போதும்
அவை உதறிஓடத் துவங்கிவிடும் 

ஓடும் அவைகளை இறுக்கப் பிடித்து
கட்டிக் காப்பதிலே என் இரவு கழிகிறது

கனன்று  சிவந்த விழிகளுடன் கண்விழிக்கையில்
அவை மேலுமெனை வஞ்சத்துடன் அழுத்துகின்றன

அடை மழைக்கு காத்திருக்க கதறுமென்னை 
வெறுப்புடன் நோக்கி மிதக்கத் துடிக்கின்றன

ஒரு மழைக்காய் காத்திருக்கும் நாளில்,பெரும் புழுதியை காற்று சுழல
கப்பல்கள் யாவும் இறக்கைகள் வளர்த்தன

வீதி வழி பின் நிரம்பப் போகும் நீரில் மிதக்க விட யாதொன்றும் இல்லாமற்போக
சிறிது சிறிதாய் கப்பலாய் மாறத் துவங்கினேன்  நான் 

Tuesday, June 8, 2010

அவனும் அவளும்

அவள்  
சட்டென தோன்றும் கவர்ச்சியை விட மெல்ல ஊர்ந்து படரும் ப்ரியம் ஆபத்தானது அறிவாயா நீ ?பின் ஏன் அறிந்தும் அறியாதது போலொரு தோற்றம்?
உன் கடிதங்களை வாசிப்பதைவிட நீ என் பெயர்  எழுதிய உறையை வருடுதல் எத்தனை கிறக்கம் என்றறிவாயா நீ? பிச்சி தான் நான்!நீ பேசிய வார்த்தைகளை கணக்கெடுத்து மனதில் ஓட்டி அதனுள்ளே அர்த்தம் கண்டுபிடிக்கும் பிச்சிதான் நான் !
உனக்கென்ன எதோ பேசி உன் வழி போகிறாய் ..அவ்வார்த்தைகள் என்னுள் நுழைகையில் சுக்கு நூறாய் சிதறி அணுவெங்கும்  இம்சிப்பதை அறிவாயா நீ?
என் உறங்கா இரவுகளில் உன் நினைவன்றி ஏதும் புகாமல் ஒரு firewall உருவாகுவதை எங்கணம் தடுக்கப் போகிறாய் ?அதனை உடைத்தா இல்லை வலுப்படுத்தியா?
உன்னைக்காணாத ஒரு நாள் உன் அலுவலகத்தை  50 முறை கூப்பிட்டு கேட்டதை என்னிடமே "யாரோ" என வியந்த படி சொன்னாயே !அது நானாக இருக்ககூடும் என கிஞ்சித்தும் நினைக்காத கல்நெஞ்சுக்காரனடா நீ !
உன்  பிறந்த நாளில் உனக்கு பிடித்த வண்ணத்தில் அணிந்து வந்த போது ஒரு சொல் கூட கூறாமல் கடந்து விட்டாயே அது ஏன்?
இத்தனை கல்லுளி மங்கனாய் இருந்தும் என்னைக்கண்டதும் உன் கண்ணில் ஒரு ஒளி மின்னுதே  அது மட்டும் என்னவென்று சொல்லிவிடு!அதை தெரிந்து கொள்ளாதவரை நான் இன்னும் பிச்சியாவேன் !
உனக்கு தெரியாமல் நான் எழுதும் வலைப்பூவை ஒருநாள் கண்டுபிடித்து விடை கொடுப்பாய்  என்று நம்பும்
உன் ப்ரிய பிச்சி .
===================================================================
===================================================================
===================================================================
===================================================================
அவன் 
என் ப்ரிய முட்டாள்  பிச்சி 
நான் எதையடி அறியவில்லை ?உன் பிரியத்தையா ? அது தான் உன் கண்வழி பாம்பாய் நகர்ந்து என் கழுத்து நெரித்து இம்சாவஸ்த்தை 
தருகிறதே! அதிலிருந்து தப்பிக்க விரும்பாமல் சரணாகதியை அடைந்தது தெரியாதா பெண்ணே ?
உன் பெயரை நான் எழுதியதை வருடுதல் கிறக்கம் என்கிறாயே ,அதை என் உயிர்த்துடிப்பு கொண்டு எழுதியதை அறிவாயா நீ?உன்னை அடையும் முன் அது பெற்ற முத்தங்கள் எத்தனை என அதனிடமே கேள் ..இனி உன் முத்தங்கள் மூலம் .
நான் பேசிய வார்த்தைகள் உன்னை அடைந்து  ,உன்னுள் கலந்து விட்டதடி,ஆனால் அவற்றை பறி கொடுத்த நான் இங்கு பித்தனென அலைவதை இன்று வரை உன்னிடம் சொன்னதில்லை 
உறங்கா இரவுகள் உனக்கு மட்டுமா சொந்தம்? 
அந்த firewall ஐ அப்படியே வைத்திரு .நாமிருவரும் அதில் புகுந்து வேறெவரும் அதில் வராதபடி செய்வோம் .
அடி பைத்தியக்காரி நீ தான் அலுவலகத்தை அழைத்தது எனக்கு தெரியாதா? உன் வாயிலிருந்து வருமென காத்து ஏமாந்தது தான் 
மிச்சம் .நான் கல்நெஞ்சுக்காரனா? இல்லை நீயா ?
இத்தனை பிரியத்தை ஏனடி  மறைக்கிறாய் ?
லூசுப்பெண்ணே !என் பிறந்த நாளுக்கு உன் சகோதரி மூலம் அந்த உடையை வாங்கி தந்தவனே நான் தான்! .அதை நீ அணிந்திருந்தது என்னையே  அணிந்தது போலிருந்ததால் அருகில் வர விபரீதம் என் நான் விலகிப்போனேன் .
எல்லாம் மறைத்த நான் என் கண் பொங்கும் ஒளியை மட்டும் மறைக்க இயலவில்லையே! கள்ளி அதை வைத்து என்னை மடக்கி விட்டாய்  ? அது கண்ணின் ஒளிமட்டுமல்ல ,உன்கண் பெருகும் காதலின் ஒளி .
போதுமா என் பதில்? 
பி.கு. எனக்கு தெரியாமல் இருக்கும் வலைப்பூ என்ற நினைப்பெல்லாம் வேண்டாம் .இங்கு பல பெயர்களில் வந்து  பின்னூட்டம் இடுவதெல்லாம் யாரென நினைக்கிறாய்? உன் புலம்பல்களை என்னை தவிர யாரடி வாசிக்க முடியும் என் ப்ரிய பிச்சி?:) .....நீ  நிஜமாகவே பிச்சிதானடி ....