Saturday, May 29, 2010

எரிநிழல்

 உன் தண்முகம்
கண்டேனில்லை 

உன்புன்சிரி 
கண்டேனில்லை 

உன் குறுவிழி 
கண்டேனில்லை

உன் திமிர்நடை  
கண்டேனில்லை

உன் உயிர்ப்பார்வை  
கண்டேனில்லை 

உன் பருந்தோள்
கண்டேனில்லை

உன் நெடுமார்பு 
கண்டேனில்லை

உன் கடி மெய்யும் 
 கண்டேனில்லை 

கண்டதெல்லாம் 
அது யாதெனின் 

உன் மனம் 
என் அகம் பற்றியதும்

பற்றியெரியும்  
என் நிழலதைத்தான் 

Wednesday, May 26, 2010

கணவனின் காதலி

என் முதல் கதை (please bear)
சுமதியை முதல் முதலில் அந்த ரிசப்ஷனில் தான் பார்த்தேன் .என் தங்கை என்று அண்ணி அறிமுகப்படுத்தினார்  .

அவளும் என்னை முதலில் பார்க்கிறாள் .பார்வையால் என்னை போலவே அளவெடுத்தாள்

சுமதி நல்ல சந்தன நிறம்.மாசுமருவற்ற கன்னங்கள்;என்னையறியாமல் என் கன்னங்களை வருடிகொண்டேன் .

என்னை முதலில் கவர்ந்தது அவளின் கால் விரல்கள் தான் .செல்வாவிற்கு கால் விரல்கள் மேல் தனிப் பிரேமை !அவராலேயே நான் அடிக்கடி pedicure  செய்து கொள்வேன் . 

என் காலும் வெடிப்புகளின்றி ஈரப்பசையுடன் பளபளப்பவை  தான்  ;ஆனால் சுமதியின் கால் தாமரை இதழ்களை ஒத்து இருந்தது ,

நல்ல வடிவான உடலமைப்பு ,வரிசையான பற்கள்,அடர்த்தியாய் ,குட்டையாய் வெட்டப்பட்ட முடி,நீள விரல்கள்,ரோஜா நிற நகங்கள்,பளபளக்கும் கண்கள். அவள் இடுப்பின் வளைவே ஆயிரம் கதைகள் பேசியது.

கண்கள் விலக்கிக் கொள்ள  இயலாமல் பார்த்துக் கொண்டே நின்றேன் .
நல்ல dress sense  கூட .ஆழ்ந்த மயில் பச்சையில் நிறத்தை எடுத்துக் காட்டக்கூடிய சேலையும் ரவிக்கையும் .

அந்த ரவிக்கை பின்புறத்தில் அழகாய் இறங்கி பார்ப்பவர்களை   எல்லாம் கிறங்கடித்தது.

அவளும் என்னை அப்படித்தான் அளவெடுத்திருக்க வேண்டும் .எங்களிடையே எதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத ஒரு spark  பறந்தது.

சுமதி என்ற பெயர் செல்வாவிற்கு மிகவும் பிடிக்கும் .என்னிடம் அடிக்கடி சொல்லிருக்கிறார்.

சுமதியின் அருகே சிறிது நரைத்த தலையுடன் ஒரு மத்திய வயது ஆண் .
"மீட் மை ஹஸ்பன்ட் விஸ்வம் " என அறிமுகப்படுத்தினாள்.அவர் மிகப்பெரிய பதவியில் இருப்பதை கேள்விப்பட்டிருக்கேன் .

ஆனால் சுமதியின் பக்கத்தில் கொஞ்சம் intimidate ஆனது போல் நின்றிருந்தார் .

அவர்களுக்கு தெரிந்தவர்கள் "சுமதி ஊருக்கு வாயேன் 'என்று   அழைத்த போது 'அய்யே இவரோடு நான் எங்கும் போவதில்லை " என முகத்தில்
அடித்தாற்போல் பதில் கூறினாள்.அவர் தர்ம சங்கடத்துடன் நின்றிருந்தார் .

அவளும் அண்ணியும் நான் இருப்பதைக்கூட பொருட்படுத்தாமல் அவரைப்பற்றி குறையை பகிர்ந்து கொண்டிருந்தனர்.

அப்போது வந்த அவர்களின் cousin  ரமணி நேராக சுமதியிடம்  போய் சிரித்து பேச ஆரம்பித்தான் .சிறிது நேரம் கழித்து" விசு ,நான் கொஞ்சம் shopping  போக வேண்டும் ,ரமணி drop செய்கிறான்" என்று கூறியபடி அவள் கையாட்டிய படியே சென்றுவிட்டாள்

ஒரு கணம் விஸ்வத்தின் கண்களில் கலக்கமும் நீர் திரையும் கண்டது நிஜம் .

நாங்கள் எங்கு சென்றாலும் செல்வாவிற்கு கொஞ்சம் கூட பிரியக்கூடாது .கூடவே இருந்து ,சிரித்து, அறிமுகங்கள் பெற்று ,நல்லதொரு ஜோடியென்று எங்களுக்குப் பெயர்

செல்வா எப்போதும்   open type .திருமணத்திற்கு பிறகு ஒரு நாள் அவர் அண்ணியை பற்றி பேசும் போது சுமதியின் பேச்சு வந்தது .

அப்போது அவர் மனதில் அவளை ஆசைப்பட்டதும் ஆனால் பெண் கேட்கக் கூடிய நிலையில் இல்லாததால் , நிச்சயம் தனக்கு மணமுடித்து தரமாட்டார்கள் என ஆசையை புதைத்துக்கொண்டதும்  கூறினார்

ஆனால் ஒரு கணம் தான்; மறுகணம் 'அது போகட்டும் ,இந்த வைரம் நீ கிடைக்க வேண்டும் என்பதால் தான் அது நடக்கவில்லையோ " என அணைத்துக்கொண்டார் .

இருந்தாலும் எனக்கு மிகவும் ஆவல் .அவர் மனம் கவர்ந்தவள் எப்படி இருப்பாளென்று !
இன்று தான் அது நிறைவேறியது.

மனதில் சொல்லிக்கொண்டேன் "நல்ல வேளை செல்வா ,அவளை நீங்கள் மணக்கவில்லை !உங்களையும் உங்கள் அன்பையும் புரிந்துகொள்ளாமல் இப்படித்தான் அலட்சியமாய் நடந்திருப்பாள்

உதட்டில் ஒரு சிறு புன்னகை ,,இது பொறாமை பட்ட மனதின் சமாதானமா ? இல்லை நிஜமாகவே வந்த நிம்மதிப்  பெருமூச்சோ? என்னவென்று தெரியவில்லை

ஆனால் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டும்  , கேட்டுக்கொண்டும் , அமைதியாக சிரித்துக் கொண்டிருந்தார்,  படத்தில் என் செல்வா .

Tuesday, May 25, 2010

புறமும் அகமும்

புறங்காணின்
  அகம் மறைந்து போமோ?
அகங் கண்டு
மகிழ்ந்ததெல்லாம் பொய்யோ?

புறங்காணா
 நட்பெல்லாம் மாயோ?
அகம் காணும் !
எனும் விழைவு வீணோ?

புறங் கண்டு
புறத்தோடல் மெய்யோ?
அகம் அது கண்டு
அழிந்தே தான் போமோ?

புறமது தான்
புவியதனில் மேலோ ?
அகங் காண்பார்
என்பவரும் யாரோ?

புறங் கண்டு
புரியாமல் ஓடுமோ?
அகம் அது கண்டு
விசும்பத்தான்  வாழ்வோ

அகம் புறம்
காணாது ஏகுமோ?
புறம் அகம்
புரிந்தே தான் மீளுமோ ?

என்றாவது ஒரு நட்பு!   

Friday, May 21, 2010

வார்த்தை விளையாட்டு

உனக்குமெனக்கும்
நடுவேயலைகின்றன
நமக்கான வார்த்தைகள்

ஒரே வார்த்தையை
இருவரும் எடுக்கும் நேரம்
அது இரட்டிப்பாகாமல்
நம் இருவரிடையகப்பட்டு
கண்சிமிட்டிச்  சிரிக்கிறது

நான் பேசநினைப்பதும்
உன்  மனதில் வருவதுமான
வார்த்தைகள்
பிரசவிக்கும் சமயமறியாது
வாதயோடலைகின்றன

நீ நினைத்தது
என்னிடமிருந்து வந்ததும்
நான் விரும்புவது
உன்னிடமிருந்து பிறக்கும் போதும்
இரசாயன மாற்றதிற்குட்பட்டு
நம்மையும் மாற்றுகின்றன .

இவ் வார்த்தை விளையாட்டில்
நாமறியாமல் ஈடுபட்டு
வார்த்தைகள் தேடிக்கொண்டே
கண்களால்
கதைக்கிறோம் நாம்  
  

Monday, May 17, 2010

M FOR மிராண்டா

 
போன வாரம் என் தோழி தன் மூன்று  வயது மகன் யத்தினுடன் எங்கள் வீட்டில் தங்க வந்திருந்தார் .தோழி சௌராஷ்டிரா மொழி பேசுபவர் .மகனுடன் தமிழிலும் பேசுவார் .அதனால் யத்தின் சௌராஷ்ட்ரமும் தமிழும் கலந்து அவன் அம்மாக்கு மட்டும்  புரியக்கூடிய மழலையில் பேசுவான் .

மூன்று வயதுக்குரிய  குறும்பும் மழலையும் வீட்டைக் கலகலப்பாக்கியது.இடம் மாறுதலும் உணவு மாற்றமும் சேர்ந்ததால் அவன் ஒழுங்காய் சாப்பிடவும் இல்லை .ஆனால் சீக்கிரம் தூங்கியும் போனான் .

இரவு  பதினொரு மணிக்கு  பசித்திருக்க வேண்டும் .தூக்கத்தில் சிணுங்கி எழுந்து கொண்டான் .பசி என்று  நாங்களும் அவனுக்கு சாப்பிட எதாவது தர முயற்சித்தோம் .இட்லி, பின்பு சப்பாத்தி ,ரொட்டியும் பாலும் ,பிஸ்கட் , தயிர்சாதம் என ஒன்றொன்றாய் முயற்சித்தோம் .எதையும் சாப்பிட மறுத்து அழுது கொண்டே இருந்தான் .

அவன் மழலையில் எதோ கேட்பது புரிந்தது. ஆனால் தோழி என்னவென்று சொல்ல மறுத்தார் .மிகவும் கம்பெல் செய்ததில் 
"அவன்  குடிக்க குளிர்பானம் கேட்கிறான் ,இப்போது எங்கே  போய் வாங்குவது"என்று அவனை சமாதானப்படுத்தினார் .

அவன் கேட்பானில்லை. வீட்டில் நல்ல வேளையாக எலுமிச்சம் பழம் இருந்தது .
உடனே அதனை சாறு பிழிந்து கொடுத்தேன் .அவன் அதை குடிக்க மறுத்து அழுதான் .தோழி அவனுக்கு பாட்டிலில் வேணுமாம் என்று கூற ,அதை ஒரு பாட்டிலில் ஊற்றி கொடுத்தேன் .

திரும்பவும் அழுகை நிற்கவில்லை. என்னவென்று கேட்டதில்  அவனுக்கு மிரண்டா தான் வேண்டுமாம்  எனக் கூற ,செய்வதறியாமல் நின்றிருந்தோம் .அழுகையின் சுருதி கூடிக்கொண்டே போனது .

நான் அந்த பழச்சாறில் சிறிது கேசரி கலர் கலந்து ஆரஞ்சு வண்ணமாக்கினேன் .திரும்ப அதை ஒரு பாட்டிலில் ஊற்றி கொடுத்தேன். இப்பவும் அழுகை நின்ற பாடில்லை .எம் எம் என்று சொல்வது மட்டும் புரிந்தது .

தோழிக்கோ கோபம் வந்துகொண்டே இருந்தது .இப்பொழுது என்னவென்று கேட்டதில்
"அவன் இது மிரண்டா இல்லை ,இதில் 'M' இல்லை என்று அழுவதாக கூறினார் .நான் கொடுத்து வேறு ஒரு பாட்டிலில் .

உடனே நான் வீட்டில் தேடி ஒரு மிரண்டா பாட்டிலை கண்டுபிடித்து அதில் மீண்டும் இதை ஊற்றி கொடுத்ததில் அவன் அழுகை சட்டென்று  நின்றது .இது  M  தானென்று அதில் இருந்ததை குடித்து விட்டு தூங்கினான் .

எப்படி பேச்சு கூட சரியாய் வராத ஒரு குழந்தைக்கு  M  என்றால் மிரண்டா என்று தெரிந்தது என்று அதிசயப்பட்டதில் தோழி, விளம்பரங்களைப்  பார்த்தே இதை அவன் கற்றுக்கொண்டதாக கூறினார் .

இத்தனை சிறிய குழந்தையின் மனதில் விளம்பரம் இப்படி புக முடியுமானால் ,நல்லவிதமான மாற்றங்கள் இதன் மூலம் எத்தனைக்  கொண்டு வரலாம்?  

Saturday, May 15, 2010

அருகில் நிலா

ஆதிரன் சுட்ட படத்தை சுட்டு(டி)எழுதியது !
அவர் தளத்தில் போடும் அளவு வராது என்பதால் என் தளத்திலேயே இந்த இடுகை


தொலைதூரக்கனவுகள்
 வானெட்டுமாசைகள்
தரை பாவ மறந்தே
பறக்குமெப்போதும்
கைவாரா  நிலவினோடு
கற்பனை வாழ் நாளில்
ஓர் flash இல் நிதர்சனம் ......        
அருகிலேயே சிரிக்கும்
ஒளிரும்  இலை.....
மனம் (கண்) விழித்தது !

Wednesday, May 12, 2010

என் பாட்டு "எங்கள் ப்ளாக்கில்"

எதோ  ஒரு தைரியத்தில், பாட்டு பாடி அனுப்புங்கன்னு engalblog ல கேட்டோன்ன, அனுப்பி வச்சுட்டேன் .அவங்களும் அதை போஸ்ட் பண்ணிருக்காங்க .
http://engalblog.blogspot.com/2010/05/blog-post_12.html.

நேரம் கிடைத்தால் கேட்டு பாருங்களேன் .
திட்ட மட்டும் திட்டாதீங்க ப்ளீஸ்





Tuesday, May 11, 2010

ஓடிக்கொண்டே இருப்பவை

"உனக்கு என்ன வேணும்ன்னு நீ தான் தீர்மானிக்கணும்" ! அனேகமாக என்னுடன் பேசுபவர்களின் தொனி இந்த அளவில் தான் இருக்கிறது .முத்தாய்ப்பாக நேற்று என்னை லிஸ்ட் போடச்சொல்லி ஒரு தொலைபேசி அழைப்பு .

என்ன வேண்டும் என யோசித்தே காலம் கழிந்து விடுமோ என்ற பயமும் வரத்துவங்கியாயிற்று.கண்ணாடியில்  உற்று நோக்கும் நேரம், அகமும் புறமும் எத்தனை வேறுபட்டு நிற்கின்றன என்ற எண்ணம் வராமல் போவதில்லை

மனதில் இருக்கும் நான்  என்ற பிம்பத்துடன் கண்ணாடியின் முன் நிற்பது பொருந்தவே இல்லை .நிஜத்தை பார்க்கும் அனைவரும் நிஜமான நிஜத்தை மிஸ் பண்ணிவிடுகிறார்கள் .(அப்படி நினைத்துக் கொள்கிறேனோ?)
இதற்கு உடனே யாராவது  சொல்லலாம்    bring out your self  .இதெல்லாம்  புரியவே  இல்லை  

இந்த நிஜ என்னை யார் கண்டு பிடிப்பார்கள் ? எதற்கு கண்டுபிடிக்க வேண்டும்? வேண்டும் தானே அப்போது தானே இந்த  misfit will fit !

இப்படி  காலை முதல் மாலை வரை  நினைத்துகொண்டே  ஒரு  நாள் ஓடிவிடுகிறது.

நிஜமாகவே நான் யார்?
இந்த கேள்வியை கேட்கும் போது வரும் பதிலானது மிகவும் பயம்  தரக்கூடியதாகவும் ,சில சமயம் பிறரால் அருவருக்கக் கூடியதாகவும் இருக்கிறது .

மனது பீத்த பெருமையை பற்றிக்கொள்கிறது .அருவருப்பும் அதற்கு உகந்ததாகவே இருக்கிறது. 

எதற்கு அங்கீகாரம் அங்கீகாரம் என்று அலைய வேண்டும்? தெரியவில்லை
எதற்கு எங்கோ போய் fit ஆக வேண்டும்? யோசிக்கணும்
ஏன் நிச்சலனமாய் இருக்க இயலவில்லை ? முயலணும்
இதெல்லாம் சாதித்தால் என்ன ஆகும் ?புரியவில்லை
ஆனால்  இவை சுற்றி வதைப்பதை நிறுத்த இயலவில்லையே !
ஒரு வேளை  இவை நின்று போனால் அன்று தான்  நான் என்ற நான் இறந்து போயிருப்பேனோ?

Sunday, May 9, 2010

அம்மா எனும் அடுத்த வீட்டுக் குழந்தை

காணுமிடமெல்லாம் தேடிக்  களைக்கிறேன் நான் ........
ஜன்னல் வழி நோக்கும் செம்பருத்தியா    ? 
சுற்றி சுற்றி   வரும் பட்டுப்பூச்சியா  ?
கொல்லையில் கரையும் கருங்காக்கையா ?
நல்லது பலிக்க சத்தமிடும் உச்சிப்பல்லியா  ?
என் வலிக்குப்  பதறும் முகமறியா மூதாட்டியா    ?
என
அன்பிலெல்லாம் உனைக்கண்டு  பனிக்கிறேன் அம்மா !
என் வயிற்றில் வந்துதிக்க
இப்பிறவியில் இயலாதெனினும்
அடுத்த வீட்டுக் குழந்தையாகவாவது வா
என் மடி இருந்து கொஞ்ச!

Thursday, May 6, 2010

பொறியில் சிக்குதல்

எல்லாப் பொறிகளிலும் இலகுவாய்
போய் சிக்கிக்கொள்கிறது சுயம் .
எந்த பொறிக்கும் வேண்டப்படாத வஸ்துவாய்  பொறியிலிருந்து இடதுகையால்
தூக்கி எறியப்படும் நானானது
மற்றொரு பொறியில் தான்
தவறாமல் விழுகிறது ,
மீண்டும் மறுமுறை தூக்கி எறியப்பட
எங்கோ உள்ளது தனக்கான இடம்
அது சிக்கும் பொறியாய் இருப்பினும் கூட...
தூக்கி எறியப்படாத வரை
சிக்குதலும் சுகம் ,
என்ற மாயையில் சுயம் !

Tuesday, May 4, 2010

நான் பிறந்த நேரம்

எனக்குள் நான்
என்னை தேடிக்களைத்தபின்
பாலை கள்ளியாய்
முட்கள் வளர்த்துக்கொண்டேன்
என்னையே  கிழிக்குமுள் ரணத்தில்
ரத்தம் பெருக சோர்ந்து சிரித்தேன்
வானின்று கீழ் இறங்கிய தேவதை ஒன்று
ஒற்றை எழுத்தாய்
எழுதிச்சென்றது
உன் பெயரை
என் வாழ்வில்
உடன்
என்னில் நான் பிறந்தேன்  

Monday, May 3, 2010

தனிமைப் பயணங்கள்

தனிமைப் பயணங்கள்
விடையனுப்பும் கையசைவுகளும்
ஜன்னல் விரல் பற்றுதல்களும்
கடைசி நேர கலங்கலும்
என்றுமே வாய்த்ததில்லை
என் பயணபொழுதுகளில் .

கேட்டு வாங்கிய ஜன்னலோரத்தில்
முகத்தில் அடிக்கும் காற்றில்
கடந்து போகும் பழைய பாடல்களில்
ஸ்ட்ரா இன்றி அருந்தும் இளநீரில்
அபூர்வமாய் கிடைக்கும் நட்பில்
சிறிதுநேரம் நம் மடி உறங்கும் மழலையின் மென்மையில்
மறந்து போகும்
இறங்கியவுடன் வரவேற்க யாருமில்லா வெறுமை... 
அடுத்த பயணம் வரை